“நிறங்கள் மூன்று” திரைப்பட விமர்சனம்!

107

சென்னை:

நடிகர் அதர்வா, ரகுமான், சரத்குமார், துஷ்யந்த், அம்மு அபிராமி, மற்றும் பலர் நடித்திருக்கும் “நிறங்கள் மூன்று”  என்ற இப்படத்தை கார்த்திக் நரேன் கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெளி வந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும்  அதர்வா தமிழ் சினிமா உலகில் எப்படியாவது இயக்குனராக வேண்டும் என முயற்சியில் இருந்து வருகிறார். தன்னுடைய கதையை வைத்து  ஒரு திரைப்படத்தை இயக்கி விட வேண்டும் என ஆர்வத்துடன் ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வதற்காக அலைந்துக் கொண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரியான தனது தந்தை சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனியாக வசிக்கிறார் அதர்வா. பள்ளி மாணவரான துஷ்யந்த், தன் தாய் தந்தை தனது விருப்பத்திற்கு எதிராக அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதால், அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு தனது ஆசிரியர் ரகுமான் சொல்லுக்கு கட்டுப்பட்டு  படிப்பில் கவனம் செலுத்துகிறார். இந்த சூழலில் துஷ்யந்த் தன் ஆசிரியர் ரகுமானின் மகளான அம்மு அபிராமியை காதலிக்கிறார்.

ஒருநாள் அதிகாலையில் ட்யூசன் சென்ற அம்மு அபிராமி காணாமல் போகிறார்.  துஷ்யந்த் தனது நண்பர்களுடன் ஒரு பக்கம் தேட தந்தை ரகுமானும் தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் ரகுமான் காணாமல் போன மகளை கண்டுப்பிடித்து கொடுக்குமாறு  போலீஸ் ஸ்டேஷனில் காவல்துறை அதிகாரி சரத்குமாரிடம் புகார் அளிக்க, அவருடைய மகளை பற்றிய விசாரணையில் இறங்குகிறார் சரத்குமார்.  அம்மு அபிராமியை தேடும் பயணத்தில் மனிதர்களின் ஒவ்வொரு முகங்கள் தெரிய வருவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் மீதிக் கதை.

எப்போது பார்த்தாலும் போதையை தலைகேற்றிக்கொண்டு கற்பனை உலகத்தில் மிதந்துக் கொண்டு திரியும் இளைஞராக நடித்திருக்கும் அதர்வா, அவருக்கு பொருத்தமான கதாபாத்திரமாக இல்லா விட்டாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதை சரியாக கையாண்டு அசத்தி இருக்கிறார். சினிமா வாய்ப்புக் கிடைக்காமல் தவிப்பது ஒரு சிக்கல் வந்ததும் துடிப்பது ஆகியன உட்பட எல்லா இடங்களிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அதர்வா.

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கு பள்ளி மாணவருக்கான தோற்றம் இல்லை என்றாலும் துடிப்பான இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் ரகுமான் அமைதியான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். தன் பள்ளி மாணவரிடம் அன்புடன் பேசி அவரது  சிக்கலை நிதானமாகக் கையாளும் திறனும் அவர் பெற்றொரிடம் பேசி தீர்த்து வைப்பதும் தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிப்பது புதிதல்ல என்றாலும், காக்கி உடை அணிந்து அவர் ஏற்றிருக்கும் தந்தை கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அபாரம்.

பள்ளி மாணவியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஜான்விஜய்,சின்னி ஜெயந்த்,ஜேம்ஸ் போன்றவர்களின் நடிப்பும் சிறப்பு.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமியும் படத்தின் காட்சிகளை உணர்ந்து கடுமையாக உழைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜேக்ஸ் பிஜாயின் இசை காட்சிகளின் தன்மையை உணர்ந்து  மிக துல்லியமாக அமைத்து இருக்கிறார்.

யாருமே யூகிக்க முடியாத ஒரு கதையை எழுதி பல திருப்பங்கள் மூலம் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதர்களுக்குள் இருக்கும் இன்னொரு நிறத்தின் மூலம் இந்த சமுதாயத்திற்கு மிக அருமையாக ஒரு நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். மூன்று கதைகளை  ஒரே கோணத்தில் இணைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ‘நிறங்கள் மூன்று’ படத்தை எல்லா ரசிகர்களும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.