சென்னை:
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கவுதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன் மற்றூம் பலர் நடுத்திருக்கும் படம்தான் ‘விடுதலை-2’ ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் – எல்ரெட் குமார் தயாரிப்பில் இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியாரை கடைநிலை காவலர் குமரேசன் துப்பாக்கி முனையில் கைது செய்வதோடு ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை முடிந்திருப்பார்கள். இதனால், நடந்த முக்கிய சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம்.
அந்த கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை பண்ணையார் பல விதத்தில் துன்புறுத்தி வருகிறார். இதனால் வெறுப்படைந்த பெருமாள் வாத்தியார் பண்ணையார் மீது காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அந்த புகாரை வாங்கிக் கொண்ட காவல்துறை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றது. இந்நிலையில் பக்கத்து ஊர் மில்லில் செங்கொடிச் சங்கம் அமைக்க செல்கிறார் பெருமாள் வாத்தியார். அங்கு தொழிலாளர்கள் மீது முதலாளிகள் செய்யும் அட்டூழியத்தையும், அநியாயத்தையும் தட்டி கேட்கிறார். இதையடுத்து பெருமாள் வாத்தியார் மீது நக்சலைட் தீவிரவாதி என்று காவல்துறையினர் முத்திரை குத்துகின்றனர்.
காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பெருமாள் வாத்தியார் தலைமறைவாக வாழ்கிறார். இவருக்கு ஆதரவாக செயல்படும் மலைவாழ் மக்களை காவல்துறையினர் தங்களது முகாமிற்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். காவல்துறையினர் அராஜகத்தால் வெகுண்டு எழுந்த பெருமாள் வாத்தியார் துப்பாக்கியை கையில் ஏந்துகிறார். பெருமாள் வாத்தியார் துப்பாக்கியை கையில் ஏந்தினாலும் காவல்துறையினர் அவரை விடாமல் துரத்தி கைது செய்கின்றனர். கைது செய்யப்பட்ட பெருமாள் வாத்தியாரை காட்டுப்பாதையில் சேத்தன் தலைமையில் அழைத்துச் செல்கின்றனர். காவல்துறை ஜிப்பை காவலர் குமரேசன் ஒட்டிச் சென்று கொண்டிருக்கும்போது பெருமாள் வாத்தியார் அந்த காவல்துறை குழுவிடம் தனது காதலையும், சமூகத்தில் ஏற்படும் அவலங்களையும், தான் இடதுசாரி கட்சியாக மாறியதையும், இதனால் காவல்துறை அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டதையும் பெரிய பெரிய நில சுவான்தார்களின் கொடுமையால் வெறுப்படைந்ததால் தனக்கு ஏற்பட்ட நிலையை பற்றி கூறுகிறார். பெருமாள் வாத்தியாரின் கதையைக் கேட்ட காவலர் குமரேசனின் மனம் எப்படி பாதிக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் ‘விடுதலை 2′ படத்தின் மீதி கதை.
இந்தப் படத்தில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் பள்ளி வாத்தியாராக பெருமாள் வாத்தியாராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்பாவியாக, தோழராக, புரட்சியாளராக, சமூக சிந்தனையாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். மக்களுக்கான பிரச்சனையை, அரசியல் தெளிவை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் மொழியில் இயல்பாகப் பேசி மக்களோடு மக்களாகத் தோள் நிற்கும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். தமிழர் மக்கள் படை தலைவர் என்று பயணித்து அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதி, காதலராகவும் மற்றும் கணவராகவும் தனது இயல்பான அபார நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார்.
ஒரு சிறந்த வலுவான கதாபாத்திரத்தில் மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் ஒரு நுணுக்கமான நடிப்பைக் கொடுத்து நம்மையெல்லாம் அசர வைத்திருக்கிறார், தனது கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு எளிமையாகவும் அழகாவும் நடித்திருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் சூரிக்கு முக்கியமான கதாபாத்திரம் பெரிதாக இல்லை என்றாலும், குமரேசன் கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடைசி கட்டக் காட்சியியில் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை பாராட்டலாம்.
பொதுவுடைமைத் தலைவராக நடித்திருக்கும் கிஷோர் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் கவுதம் வாசுதேவ்,சேத்தன்,தமிழ் உள்ளிட்டோர் அத்துறையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி தத்ரூபமாகவே மாறி நடித்திருக்கிறார்கள்.
வங்க போராளியாக சில காட்சிகளில் தலை காட்டும் இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், அவருடன் இருக்கும் சரவணசுப்பையாவும் நடிப்பில் குறை வைக்கவில்லை. கென்கருணாஸ் மற்றும் அவருடைய தோழர்கள்,பாவெல்,பாலாஜிசக்திவேல் உள்ளிட்ட அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.பின்னணி இசையில் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்து காணப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் மக்கள் பயணிக்க முடியாத இடங்களில் பயணித்து, அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறந்த முறையில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.
இயக்குநர் வெற்றிமாறன் சொல்ல வந்த அரசியலை முதல் காட்சியில் இருந்து ஆரம்பித்து படத்தின் கடைசிக் கட்டக் காட்சியில் சூரி செய்யும் சம்பவம் வரை சுவாராஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார். தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை மிக சிறப்பாக கையாள்வதில் திறமையும் சாமார்த்தியமும் மிகுந்தவர் என்றாலும் படம் முழுவதும் வசனங்கள் அதிகமாக இருப்பது குறையாக இருக்கிறது. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்ந்த வகை மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கம் மற்றும் செயல்கள் ஆகியனவற்றைப் பட்டியலிட்டிருந்தாலும், இவைகளில் சில குறைகளாக தெரிகிறது.
மொத்தத்தில் “விடுதலை-2’ படம் இளம் தலைமுறையினருக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.