சென்னை:
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம், நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஷான்விகா ஸ்ரீ, முத்தமிழ், பிரசன்னா பாலசந்திரன், அனிருத், பாலாஜி சக்திவேல், அபிலாஷ், ஸ்ரீநிவாசன், காயத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “குடும்பஸ்தன்”
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தற்போது வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் பல எதிர்ப்புகளையும், வேதனைகளையும் அனுபவிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. அதுபோல்தான் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் எதிர்ப்புகள் வந்தாலும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதால் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களால் அந்த திரும்ணத்தை தடுக்க முடியவில்லை.
காதல் திருமணம் செய்து கொண்ட மணிகண்டனுக்கு குடும்பம் நடத்த அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எப்படியாவது முன்னேற்றம் அடைந்து தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்யும்போது பலவித பிரச்சனைகளால் தன்னுடைய வேலையை பறிகொடுக்கிறார். தனது வேலை பறிபோன விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் வேறு அலுவலகத்தில் பணிபுரிய முற்படுகிறார் மணிகண்டன். இந்த சூழ்நிலையில் தன் குடும்பத்திற்காக பலரிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்குகிறார். இந்நிலையில் மணிகண்டனின் சகோதரியின் கணவர் குரு சோமசுந்தரம் மணிகண்டனுக்கு வேலை பறி போன விஷயத்தை சொல்லி அனைவரது முன்னிலையில் அசிங்கப்படுத்துகிறார்.
இதனால் மனம் வேதனையடைந்த மணிகண்டன் ஏதாவது ஒரு விதத்தில் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக சொந்தமாக ஒரு பிஸ்கட் பேக்கரி கடையை திறக்கிறார். அதுவும் பலன் இல்லாமல் நஷ்டம் ஏற்படவே என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற மனநிலையுடன் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் மணிகண்டன், தனது குடும்பத்தாரின் நடவடிக்கையால் பணம் தான் வாழ்க்கை, என்ற மனநிலைக்கு மாறுகிறார். இக்கட்டான சூழ்நிலையில் பாலாஜி சக்திவேல் மீண்டும் மணிகண்டனுக்கு வேலை கொடுக்க, அந்த வேலையில் அமர்ந்த பிறகு, தான் வாங்கிய கடனை அடைக்கிறார். இந்த சூழலில் வெளிநாடு சென்று பணம் சம்பாபிப்பதற்கு முற்படுகிறார். குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன் வெளிநாடு செல்ல அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் ‘குடும்பஸ்தன்’ படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக மணிகண்டன் நடித்தாலும், ஒரே பாணியிலான கதையை தேர்வு செய்யாமல் ஒரு குடும்பஸ்தனாக கதாபாத்திர தேர்வு செய்து அதில் தன் திறமையான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை தேர்வில் மிக தெளிவாக, கவனமாக செயல்பட்டு இருக்கிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.காதல் திருமணம், அதை தொடர்ந்து குடும்பத்தில் எழும் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், அதை சமாளிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் ஏற்படும் தோல்விகள் என மிகவும் அருமையாக தத்ரூபமாக நடித்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக சான்வி மேக்னா நடித்திருக்கிறார். புதுமுகம் என்றே தெரியாத அளவிற்கு அதிக படங்கள் நடித்தது போல் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
தன் சகோதரியின் கணவனாக குரு சோமசுந்தரம் ,அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம், அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மூலம் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
வைசாக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையை வலுபடுத்தப் பயன்பட்டிருக்கிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன் காதல் திருமணம் செய்துக் கொண்டாலும், அன்றாடம் தன் குடும்பத்திற்காக தேவைப்படும் பணத்திற்காக ஒவ்வொரு ஆணும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இயல்பு தன்மை மாறாமல் பிரசன்னா பாலச்சந்திரனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமி மிக சிறப்பாக அனைவரும் ரசிக்கும்படி ஒரு உன்னதமான படமாக இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘குடும்பஸ்தன்’ படத்தை மகிழ்ச்சியாக சிரித்து மகிழலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.