சென்னை:
மீனாக்ஷி அம்மன் மூவிஸ் அருண்குமர் சம்மந்தம் தயாரிப்பில் என்.சங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு, செந்தில், சுப்பு பஞ்சு, இளைய வர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, வைகா ரோஸ், மயில்சாமி, சித்ரா லட்சுமணன், அஸ்மிதா சிங் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருககும் படம்தான் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
செந்தில் தலைவராக இருக்கும் கட்சியில் யோகி பாபுவும் ,சுப்பு பஞ்சுவும் அரசியல்வாதிகளாக இரு துருவங்களாக இருக்கின்றனர் . யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.
அதற்காக பள்ளிக்கூடத்தில் இருந்து இருவரும் தங்கள் அரசியலை நடத்துகிறார்கள். அவனை இவன் அடிமையாக்க வேண்டும் இவனை அவன் அடிமையாக்க வேண்டும் என்று எண்ணி இருவரும் போட்டியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இருவரும் கட்சி தலைவர் செந்தில் நடத்தும் பள்ளியில் ஒன்றாக படிக்க இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்படுகிறது. பள்ளி படிப்பிலிருந்தே யோகிபாபுவின் இரண்டு மகன்களும் தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்ந்தாலும் இருவரும் பெரியவர்களாகி அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் மீதிக் கதை.
யோகி பாபு கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் நமக்கு வெறுப்பாக மாறி போரடிக்க வைக்கிறது. அரசியல்வாதியாக இருந்து கொண்டு நையாண்டி அரசியல் செய்யும்போது ரசிக்க முடியவில்லை.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் இயக்குனர் கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வய்துக்கு மீறிய பேச்சு செயல் ஆகியன இருந்தும் அவற்றை இயல்பாகச் செய்து நன்றாக நடிக்கிறார்கள் என்கிற பெயரைப் பெறுகிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
சிறுமி ஹரிகா பெடடாவின் , நடிப்பும் அருமை. சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தின் தன்மையை உஊர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ படத்தொகுப்பும் சிறப்பு .
அண்மையில் மறைந்துவிட்ட சங்கர் தயாள் கதை, எழுதி இயக்கியிருக்கிறார், தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்து இயக்கியிருக்கிறார்.அவருடைய முந்தைய படமான சகுனியைப் போலவே இந்தப்படத்திலும் சமகால அரசியல் நிகழ்வுகளை வைத்து அவர் செய்திருக்கும் நையாண்டிகள் சிரிக்க வைக்கின்றன.
மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ அனைவரையும் சிரிக்க வைக்கும்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.