‘வல்லான்’ திரைப்பட விமர்சனம்!

135

சென்னை:

விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி தயாரித்திருக்கும் வல்லான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.மணி சேயோன். இப்படத்தில் சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பிரபல மத போதகரான ஜெயக்குமாரின் மகளான அபிராமி வெங்கடாசலத்தின் கணவர் தொழிலதிபர் கமல் காமராஜ் கொடுரமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொடுரமாக கொலை செய்யபட்ட அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரால் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. இந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி அருள் டி சங்கர், பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்.

இந்த சூழலில் தனியார் சேனலில் இந்த கொலை வழக்கை பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பெண் நிருபர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்.  தொழிலதிபர் கமல் காமராஜின் கொலை வழக்கை பற்றி விசாரிப்பதற்காக பல தடயங்களை தேடி அலைகிறார் சுந்தர்.சி . இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட கமல் காமராஜ் அலுவலகத்தில் பணி புரிந்த தன் வருங்கால மனைவி காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்று சுந்தர்.சி நினக்கிறார். இந்த விசாரணையின்போது கமல் காமராஜிடம் தொடர்பில் இருந்த தோழிகள் மற்றும் மாடல் அழகி ஹெபா படேல், வீட்டு பணிப்பெண், மனைவி அபிராமி வெங்கடாசலம், இவரின் முதல் கணவர், இவர்களின் மகள் என பலரிடம் கொலை சம்பந்தப்பட்ட விவரங்களை ஆராயும்போது, காவல்துறையினர் சில பெண்களின் சடலங்களை மீட்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்.சி. யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதில்  சில உண்மைகளை கண்டுபிடிக்கிறார். இறுதியில் பெண்களை கொலை செய்தவர்களையும், தொழிலதிபர் கமல் காமராஜை கொலை செய்தவர்களையும் சுந்தர்.சி. கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘வல்லான்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி வழக்கமான நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகளில் அசத்தியிருக்கிறார். காதலி கொலை செய்யப்பட்டதை அறிந்து அந்த ஒரு காட்சியில் அழுது நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் படத்தில் அதிக காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பெறுகிறார்.

மத போதகராக வரும் ஜெயக்குமார் , ஹேபா படேல், அபிராமி வெங்கடாசலம் ,தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப  நேர்த்தியாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்  மணி பெருமாள் தன் ஒளிப்பதிவு மூலம் ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

வி.ஆர்.மணி சேயோன் எழுதி இயக்கியிருக்கிறார். பல படங்களின் கதைக்களம் என்கிற எண்ணம் எந்த இடத்திலும் வந்துவிடாதபடி காட்சிகளை திரில்லாக அமைத்து இயக்கியிருக்கிறார். கொலைகள், அதன் பின்னணியில் நடைபெறும் மர்மங்களை கதையாக கொண்டு, இயக்கி இருப்பதால் இந்தப் படம் ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ், கிரைம் நிறைந்த திரில்லர் படம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில், ‘வல்லான்’ படம் கிரைம் ரசிகர்களுக்கு விருந்து.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.