சென்னை:
2022 இல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘சுழல்’ இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே ‘சுழல் 2’ வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே வெளி வந்த கதையின் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் அனைத்தும் மாறுபட்டு புதிதாக இருக்கின்றன. இந்த ‘சுழல்-2’ தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா பிளஸ்சி, சிரிஷா, அபிராமி போஸ், நிகிலா ஷங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி, அஸ்வினி நம்பியார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எட்டு எபிசோட் கொண்ட இந்த வெப் தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே. எம். இருவரும் இணைந்து இயக்கி இருக்கின்றனர். முதல் பாகம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் பாகம் முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ‘சுழல்-2’ வெப் தொடரின் கதையைப் பொருத்தவரையில்,
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லால், ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட வழக்கை நீதி மன்றத்தில் வாதாடி, அவரை சிறையிலிருந்து விடுவிக்க முயலுகிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவரது கடற்கரை வீட்டில் ஓய்வு எடுக்க சென்றபோது மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக வரும் காவல்துறை சிறப்பு அதிகாரி கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். இருவரும் இணைந்து விசாரணை செய்யும்போது லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட ஒரு பெரிய கதவின் பின்னால் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்கிறார். கெளரி கிஷன்தான் கொலை செய்தார் என்று நினைத்த காவல்துறை அதிகாரி கதிர், சரவணனுடன் இணைந்து அவரை கைது செய்கின்றனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாலும், அவரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியவில்லை. இந்த சூழ்நிலையில் வேறு சில மாவட்டங்களில் உள்ள வெவ்வேறு காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாகச் சொல்லி ஏழு இளம் பெண்கள் சரணடைகிறார்கள்.
கெளரி கிஷனுடன் சேர்த்து மொத்தம் எட்டு பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருப்பதும், அவர்களின் பின்னணி குறித்த விசாரணை செய்தபோது எந்தவித தகவல்களும் கிடைக்காமல் காவல்துறை ஒன்றும் புரியாமல் தவிக்கிறது. உண்மையில் லாலை சுட்டுக் கொன்ற மர்ம நபர் யார்? இந்த எட்டு இளம் பெண்களுக்கும், லாலுக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை, பிரமாண்டமாகவும், திரில்லாகவும் சொல்வதே ‘சுழல் 2’ வெப் தொடரின் மீதிக் கதை.
‘சூழல்’ முதல் பாகம் எப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்ததோ அதைவிட ஒரு மாறுபட்ட அனுபவத்தை எந்த வித குறையும் இல்லாமல் சுழல் இரண்டாம் பாகத்தை அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தனது சித்தப்பாவை கொலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பாகத்தில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டு, சிறையில் இருந்துக் கொண்டே கதிருக்கு உதவி செய்யும் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருந்தாலும், கடைசிக்கட்ட காட்சிகளில் அவர் அற்புதமாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முதல்பாகத்திலும் விசாரணை அதிகாரியாக இரண்டாமிடத்தில் இருந்த கதிர்,இப்போது முதலிடம் பிடித்து நடிப்பில் அசத்திருக்கிறார். ஏற்கனவே பழகிய கதாபாத்திரம் என்பதால் மிக இயல்பாக அதை உணர்ந்து நடித்திருக்கிறார். தன்னை சிறுவயது முதல் எடுத்து வளர்த்த வழக்கறிஞர் லால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடையும் கதிர் அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க முயலும் காட்சிகளில் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
சிறப்பு காவல்துறை அதிகாரியாக கதிருக்கு துணையாக இந்த கொலை வழக்கில் அவருக்கு உதவி செய்யும் மற்றொரு காவல்துறை ஆய்வாளராக சரவணன் நடித்திருக்கிறார்.
தன்னைவிட ஜூனியர் கதிர் என்பதால் அவரை சில காட்சிகளில் மதிக்காமலும் இருப்பது போல் பேசும் சரவணன் தனது ஈகோவை மனதில் வைத்துக் கொண்டு சிறந்த முறையில் நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
லால் வழகறிஞராக தனது பணியை மிக சிறப்பாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். கொலை வழக்கில் சரணடையும் 8 இளம் பெண்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சிமா மோகன், சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் சரோஜா என தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் கதைக்கு தகுந்தவாறு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப், இது இணையத் தொடர் என்று எண்ணாமல், சினிமா என்ற பெரிய திரைகளுக்கேற்ப காட்சிகளை வடிவமைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்து நம்மை அசர வைத்து இருக்கிறார். சூரசம்காரம், காளி அவதாரங்கள், திருவிழா, பக்தர்கள் காளி வேஷம் போட்டுஆடும் ஆக்ரோச ஆட்டம், அரக்கனின் ஆட்டம் எல்லாம் பெரும்பாலான காட்சிகளை பார்க்கும்போது இந்த தொடர் மிகவும் பிரமிப்பாக அமைந்திருக்கின்றன.
இந்த தொடரில் பாடல்களில் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவுக்கு பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பின்னணி இசையில் எப்போதும் போல சத்தம் அதிகமாகவே இருக்கிறது. அந்த அதிக சத்தத்தை சற்று குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
முதல் சீசன் போன்றே விறுவிறுப்பான திரைக்கதையை இந்த சீசனுக்கும் எழுதி இருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி இயக்குநர் தம்பதிகள். இந்த தமிழ் சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்தை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு அதைத் திரைமொழியில் கொடுத்திருக்கிறார்கள்.
பிரம்மா மற்றும் சர்ஜுன் கே. எம். என இரண்டு இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். அவர்கள் இயக்கியிருக்கும் எபிசோடுகள் எந்த விதத்திலும் காட்சிகளில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், பலவித கதாபாத்திரங்கள் மூலம் பல வித திருப்பங்களுடன் வெப் சீரிஸ் பார்க்கும் பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லாமல் புரிய வைக்க வேண்டும், என்பதற்காக பல சவால்களுடன் பணியாற்றி வெற்றி பெற்று இருக்கின்றனர்.
மொத்தத்தில், ‘சுழல் 2’ வெப் தொடர் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.
?