‘அகத்தியா’ – திரைப்பட விமர்சனம்!

105

சென்னை:

பா.விஜய் இயக்கத்தில் தற்போது வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “அகத்தியா” படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், எட்வர்டு சோனென்ப்ளிக், மாடில்டா, ராதாரவி, நிழல்கள் ரவி, ரோகிணி, சார்லி, யோகி பாபு, ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, செந்தில், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஐசரி கே.கணேஷ், ‘வாம்இண்டியா’ அனீஷ் அர்ஜுன் தேவ் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தமிழ் சினிமா துறையில் கலை இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகன் ஜீவாவுக்கு முதன்முதலாக ஒரு படத்தில் கலை இயக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. தனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி, நல்ல பெயரையும் பாராட்டையும் பெற வேண்டும் என்று நினைக்கும் அவர், படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரியில் ஒரு பழைய பிரெஞ்சு பங்களாவை வாடகைக்கு எடுத்து, பல லட்ச ரூபாய் சொந்த பணத்தை செலவு செய்து, பிரமாண்டமான அரங்கம் அமைக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் படத்தை எடுக்காமல், கைவிட்டு விட்டதால் ஏமாற்றம் அடைந்த ஜீவா முதலீடு செய்த பணத்தையும் இழந்து விட்டதால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில்  ஏதாவது ஒரு தொழில் செய்து தனது முதலீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது காதலி ராஷிக்கண்ணாவிடம் ஆலோசனை செய்யும்போது,  படப்பிடிப்புக்காக அனைவரும் ரசிக்கும் விதத்தில் கலை நயத்துடன் அமைத்த பேய் அரங்கை பொதுமக்கள் பார்வைக்காக வடிவமைத்து அனுமதித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்…என்று ஜீவாவுக்கு தைரியம்  கொடுக்கிறார்.

அதே பங்களாவில் அச்சமூட்டும் உருவங்களை வைத்து ‘பேய் பங்களா’வாக மாற்றி, ‘திகிலூட்டும் பங்களா’ என்ற பொருளில் ‘ஸ்கேரி ஹவுஸ்’ என பெயர் சூட்டி, இந்த ஸ்கேரி ஹவுஸை பார்வையிடுவதற்கு கட்டணம் வசூலித்து, பணம் சம்பாதிக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்., இந்நிலையில் அந்த அரங்கிற்கு உள்ளே பல்வேறு அமானுஷ்யங்கள் நடக்கின்றன. மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த ஸ்கேரி ஹவுஸில் உண்மையாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, பார்வையிடுவதற்கு ஸ்கேரி ஹவுஸிற்க்குள் சென்ற ஓர் இளைஞன் மாயமாகிவிட, அது சர்ச்சையாக மாறுகிறது. இதனால் அரசாங்கம்  அந்த ஸ்கேரி ஹவுஸை மூடச் சொல்லி உத்தரவிடுகிறது. அங்கிருந்து ஜீவாவையும்  அந்த அமானுஷ்ய சக்திகள் விரட்டியடிக்கிறது.

இதற்கிடையே ஒரு நாள் மாயமான இளைஞனை தேடுவதற்காக மீண்டும் அந்த ஸ்கேரி ஹவுஸிற்கு  சென்ற ஜீவாவுக்கு ஒரு பழைய பிலிம் ரோல் அங்கு அவருக்கு கிடைக்கிறது. அந்த பிலிம் ரோலில் 1940-ஆம் ஆண்டில் வாழ்ந்த சித்த மருத்துவரான அர்ஜுன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களையும், சில தகவல்களையும் பதிவு செய்து, முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு அதிகாரிக்கு அவரது தங்கையை குணமாக்குவதற்காக அர்ஜுன் சித்த மருத்துவம் செய்து சிகிச்சை அளிப்பதும், எலும்புருக்கி நோயான கேன்சருக்கும் அர்ஜுன் மருந்து கண்டுபிடிக்க முனையும்போது அவர் கொல்லப்படுவதும் அந்த பிலிம் ரோலில் காட்சிபடுத்தி இருப்பதைக் கண்டு அதிச்சியடைகிறார். கொல்லப்பட்ட அர்ஜுனுக்கும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அறிந்துக் கொண்ட ஜீவா, அங்குள்ள மர்மங்களை கண்டுபிடிக்க முயலுகிறார். அப்போது அமானுஷ்ய சக்திகளால் பல விதத்தில் ஜீவாவுக்கு துன்பங்கள்ஏற்படுகிறது. அமானுஷ்யங்களின் இடையூறுகளைக் கடந்து அந்த பங்களாவில் இருக்கும் மர்மத்தை ஜீவாவால் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையா?  என்பதை பல திருப்பங்களுடன் திகிலூட்டும் விதத்தில் சொல்லுவதுதான் ‘அகத்தியா’ படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் கதாநாயகன் அகத்தியனாக ஜீவா நடித்திருக்கிறார். பெற்ற தாய்க்காக எப்படிப்பட்ட அமானுஷ்யங்களையும் எதிர்கொள்ள துணிந்து போராடும் காட்சிகளில் ஜீவா தனித் தன்மையோடு அந்த கதாபாத்திரத்தை புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.   மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட உண்ர்வுகளில் ஆட்படுவதும் அதிலிருந்து விலகி ஓடாமல் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்வது போன்ற காட்சிகளில் ஜீவாவின் நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது.

கதாநாயகியாக ஜீவாவின் காதலி வீணாவாக னடித்திருக்கும் ராஷி கண்ணாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும், கொடுத்த பணியை குறைவின்றி சிறப்பாகவே செய்திருக்கிறார்.

பிரெஞ்சு நாட்டு வாழ் தமிழராக மேற்கத்திய உடையணிந்த சித்த மருத்துவர் சித்தார்த்தன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான வலுவான நடிப்பு மூலம் திரையில் தோன்றும் போதெல்லாம் அனைவரின் கவனத்தையும்  ஈர்க்கிறார்.

பிரெஞ்சு ஆளுநர் எட்வின் டூப்ளே கதாபாத்திரத்தில் வரும் எட்வர்டு சோனென்ப்ளிக் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது தங்கை ஜாக்குலினாக வரும் மாடில்டா அழகு தேவதையாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி காமெடி என்ற பெயரில் சில தேவையில்லாத வசனங்களை பேசி ரசிகர்களை வெறுப்படைய செய்கிறார். செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ், சாரா, இந்துஜா ,ரோகிணி, பூர்ணிமா பாக்யராஜ் போன்ற அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை நிறைவாக செய்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கும் விதத்தில் இருக்கிறது. ‘என் இனிய பொன் நிலாவே’ மறுபதிப்பு மிகவும் ரசிக்க கூடிய ஒன்று.பின்னணி இசை கதைக்களத்துக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது.

தீபக்குமார் ஒளிப்பதிவும் கம்யூட்டர் கிராபிக் காட்சிகளும் சிறப்பான நல்ல காட்சி அனுபவங்களைக் கொடுக்கின்றன.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் பா.விஜய். ஆங்கில மருத்துவம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில், நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மேன்மையை பறைசாற்றும் கதைக்கருவைத் தேர்ந்தெடுத்து, இளைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கக் கூடிய விதத்தில் இயக்கி இருப்பதை பாராட்டலாம். நல்ல கருத்து என்றாலும் அதைக் காட்சி ஊடகத்தில் சொல்கிறோம் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருப்பதையும் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.

மொத்தத்தில், ‘அகத்தியா’ அனைத்து ரசிகர்களும் ரசிக்கக் கூடிய திகில் த்ரில்லர் படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.