சென்னை:
‘ஈரம்’ படத்தில் தண்ணீரில் பேய் பயத்தைக் காட்டி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் அறிவழகன் சப்தத்தில் வரும் ஆவிகளை பயணிக்க வைத்து பேய் என்று சொல்லி, தற்போது வெளி வந்திருக்கும் படம்தான் ‘சப்தம்’. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்க மற்றும் லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம் கொள்கிறார்கள். அமானுஷ்ய சக்திகள் கல்லூரிக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக அதற்காக, மும்பையிலிருந்து அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து, கண்டுபிடித்து, அதனுடன் உரையாடும் நிபுணரான பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் ஆதி அந்த கல்லூரிக்கு வரவழைக்கப்படுகிறார்.
அந்த மருத்துவக் கல்லூரியில் நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கதாநாயகன் ஆதி, கல்லூரி முழுவதிலும் ஒவ்வொரு இடமாக தான் வைத்திருக்கும் கருவிகள் மூலம் ஆவி இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்யும்போது, அதில் ஆவி இருப்பது உறுதியாகிறது. எதற்காக அந்த ஆவிகள் பழிவாங்குகிறது என்பதை அந்த கல்லூரியில் இருந்துக் கொண்டு மீண்டும், மீண்டும் ஆராய்ச்சி செய்கிறார். அப்போது சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை கண்டுபிடிப்பதோடு, அந்த மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், மேற்படிப்பு மாணவியுமான கதாநாயகி லட்சுமி மேனனை ஒரு அமானுஷ்ய சக்தி பின்தொடர்வதை ஆதி கண்டுபிடிக்கிறார்.
ஆவிகளால் சூழப்பட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு முன்பு ஒரு தேவாலயமாக இருந்த ஒரு பழைய நூலகத்தில் லட்சுமி மேனன் மூலம் மேலும் விசாரிக்க முயற்சிக்கிறார். ஆனால் லட்சுமி மேனன் ஆதியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதனால் அங்கு ஏற்பட்ட மரணங்களுக்கு இடையே உள்ள விசித்திரமான தொடர்புகளைக் கண்டறியும் போது, கல்லூரியை வேட்டையாடுவது 42 ஆவிகள் என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கண்டுபிடிக்கிறார். அந்த 42 ஆவிகளின் கோபத்திற்க்கு என்ன காரணம்…அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதை ஆதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் “சப்தம்” படத்தின் மீதிக் கதை.
ஆவிகளை துப்பறியும் ஒரு உன்னதமான கதாபாத்திரத்தில் உண்மையான அமானுஷ்ய புலனாய்வாளராக எந்தவித பயமும் இல்லாமல் அதற்கு தகுந்த உடல் மொழியுடன் மிக சிறப்பாக ஆதி நடித்து இருக்கிறார். ஆக்ஷன் கதாநாயகன் என்றாலும் இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றவாறு தன் நடிப்பை வெளிப்படுத்தி அற்புதமாக பயணித்திருக்கிறார்.
டாக்டர் அவந்திகாவாக லட்சுமி மேனன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நகைச்சுவைக்காக ரெடின் கிங்ஸ்லியை நடிக்க வைத்தாலும், சில இடங்களில் சிரிக்க வைத்து பல இடங்களில் நம்மை சோதிக்கிறார்.
சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ராஜீவ்மேனன் என நிறையப்பேர் படத்தில் நடித்திருந்தாலும், அவரவர்களுக்கு ஏற்றவாறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், திகில், திரில்லர் படம் என்பதால் அதற்கேற்றவாறூ மிககச்சிதமாக வண்ணங்களை பயன்படுத்தி ஹாலிவுட் தரத்தில் மிகவும் அபாரமாகவும், அற்புதமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் மையமே ஒலி என்பதால் வெவ்வேறு உயிர்களின் இசை தொகுப்பை சப்தமாக மாற்றி காதுக்குள் ரீங்காரமிடச் செய்திருப்பது தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
‘ஈரம்’ படம் மூலம் தண்ணீரில் ஆவியை பயணிக்க வைத்து ரசிகர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், இதில் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்து பயமுறுத்தி இருக்கிறார். அமானுஷ்ய சக்தி என்று தொடங்கி 42 ஆன்மாக்கள் என நீண்டு செல்லும் திரைக்கதையை வைத்துக் கொண்டு மருத்துவத்துறை சார்ந்து நடக்கும் சில விஷயங்களையும் சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில், ‘சப்தம்’ படம் பேய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.