‘வருணன்’ – திரைப்பட விமர்சனம்!

114

சென்னை:

ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த், கேப்ரில்லா, ஹரிப்ரியா, சங்கர் நாக் விஜயன், பிரிய தர்ஷன், ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன் ஹைடி கார்த்தி, கவுசிக், கிரண்மய், தும்கன் மாரி, பேபி ஜாய்ஸ், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “வருணன்’ இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பது ஜெயவேல் முருகன்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

வட சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்கிறார் ராதாரவி. இன்னொரு ஏரியாவில் சரண்ராஜ் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். தனித்தனியாக இருவரும் தொழில் செய்தாலும், ஒருவர் ஏரியாவுக்குள் இன்னொருவர் வருவதில்லை என்பதால் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் இரண்டு உரிமையாளர்கள் மத்தியில் எந்தவித மோதல் இல்லாமல் அவர்கள்  தொழில் செய்து வந்தாலும், இரண்டு தரப்பில் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு மோதலில் ஈடுபடுகிறார்கள். இந்த சூழலில் காவல்துறை அதிகாரி ஜீவா ரவி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்.

இதற்காக ராதாரவிக்கு இணக்கமாகவும், இன்னொரு ஏரியாவில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் சரண்ராஜ் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி, மைத்துனர் டப்பா சங்கர்நாக் விஜயன் ஆகியோருக்கு எதிராகவும் செயல்பட்டு, ராதாரவியுடன் பங்குதாரர் ஆக முயற்சிக்கிறார். ஆனால், கூட்டு தொழில் செய்ய ராதாரவிக்கு விருப்பம் இல்லாததால் காவல்துறை அதிகாரி ஜீவா ரவி , இந்த தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்யும் இருவர் மத்தியில் பகையை ஏற்படுத்தி, சரண்ராஜ் கும்பலுடன் அவர் இணைந்துவிடுகிறார். இதனால் இருவருக்கும் இடையே பெரிய அளவில் தொழில் போட்டி ஏற்பட்டு ஒருவரையொருவர் கொலை செய்கிற அளவுக்கு விரோதம் வளர்கிறது.  அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது? அதிலிருந்து  மீண்டார்களா? இல்லையா? என்பதுதான் இந்த ‘வருணன்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மிக அருமையாக தன் கதாபத்திரத்தின் தன்மையை உணர்ந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார். காதல், நட்பு, வீரம் உள்ளிட்ட உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். தந்தையின் வழியில் வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருவார் என்பது நன்கு தெரிகிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக, மருது என்ற கதாபாத்திரத்தில் பிரியதர்ஷனும், அவருக்கு ஜோடியாக அக்னி என்ற கதாபாத்திரத்தில் ஹரிபிரியாவும் நடித்திருக்கிறார்கள். இருவரும் அளவாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

தண்ணீர் கேன் தொழில் செய்யும் தொழிலதிபர் அய்யாவுவாக ராதாரவி நடித்திருக்கிறார். எந்த வம்புச் சண்டைக்குப் போகாதவராக, அனுபவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக  வெளிப்படுத்தியிருக்கிறார். சரண்ராஜின் நடிப்பு கதைக்களத்துக்கு மிக பொருத்தமாக இருக்கிறது.

சரண்ராஜின் மனைவி ராணியாக ‘பிக்பாஸ் தமிழ்’ மகேஸ்வரி நடித்திருக்கிறார். அவரும் அவரது தம்பி டப்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சங்கர்நாக் விஜயனும் வில்லத்தனத்தில் பயத்தை காட்டி மிரட்டியிருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரி மதுரை வீரனாக வரும் ஜீவா ரவி, யாளியாக வரும் அர்ஜுனா கீர்த்திவாசன், ரம்யாவாக வரும் கிரண்மயி, துளசியாக வரும் பேபி ஜாய்ஸ், சீமாவாக வரும் ஐஸ்வர்யா உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து ரசிகர்கள் ரசிக்கும்படி நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், தனது ஒளிப்பதிவு மூலம் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், கிளைமாக்ஸ்  சண்டைக் காட்சிகளையும் படமாக்கிய விதம் மிகச்சிறப்பு.

போபோ சசியின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்தான். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கதை, எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழிலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். நமக்கு  இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த தண்ணீர் இப்போது சில தொழிலதிபர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் விற்பனைச் சரக்காக மாறிவிட்டது என்பதையும், இந்த வியாபாரத்தில் போட்டி. பொறாமை, சண்டை, கொலை உள்ளிட்ட பலவற்றை புகுத்தி  ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘வருணன்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.