சென்னை:
மோகன்லால், ஷோபனா, மனியன்பில்லா ராஜூ, இர்ஷாத் அலி, பிரகாஷ் வர்மா, பினு பப்பு, பர்ஹான் பாசில், தாமஸ் மேத்யூ, அம்ரிதவர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “தொடரும்” இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருப்பவர் தருண் மூர்த்தி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக இருந்த மோகன்லால், ஒரு விபத்தால் அதிலிருந்து விடுபட்டு விட்டு தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் கம்பம் பகுதியில் குடியிருந்து வருகிறார். அவருடைய மனைவி ஷோபனா. ஒரு மகன். ஒரு மகள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மோகன்லால் ஒரு பழைய அம்பாசிடர் கார் வைத்து கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். தன் குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் இருக்குமோ அதேபோலவே, தான் வைத்திருக்கும் பழைய அம்பாசிடர் கார் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார் மோகன்லால். இந்த நேரத்தில் அவருடைய மாஸ்டர் பழனி சென்னையில் காலமாகிவிட அவருடைய இறுதிச் சடங்கிற்காக சென்னை சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய மோகன் லாலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
அவருடைய அம்பாசிடர் காரில் கஞ்சா கடத்தியதாக காரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். தனது அம்பாசிடர் கார் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த காரை மீட்க காவல்துறை அதிகாரிகளிடம் போராடுகிறார் மோகன்லால். தன்னுடைய காரை திருப்பித் தரும்படி காவல் உதவி ஆய்வாளரிடம் மோகன்லால் கெஞ்சி கேட்கிறார். இந்த விவகாரம் காவல்துறை ஆய்வாளர் பிரகாஷ்வர்மாவிடம் செல்ல அவர் காரை திருப்பித் தருவதாக வாக்கு கொடுத்து ஒரு சவாரிக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி மோகன்லாலிடம் கூறுகிறார்.
அதற்கு ஒப்புக் கொண்ட மோகன்லால், ஆய்வாளர் பிரகாஷ்வர்மா துணை ஆய்வாளர் பினு, மற்றும் ஒருகாவலருடன் இணைந்து ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக இவர்களுடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அன்று இரவு திருமண வரவேற்பு முடிந்த பிறகு ஒரு மலைப் பாதையில் பயணம் மேற்கொள்ளும்போது, மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகிறது. மோகன்லாலுக்கு ஏற்படுகின்ற அந்த திருப்பங்கள் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? என்பதுதான் “தொடரும்” படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன்லால் பென்ஸ்மற்றும் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்பான குடும்ப தலைவர், தன் பிள்ளைகளிடம் எதார்த்தமாக பழகும் தந்தை, சிறு சிறு குறும்புத்தனம் மூலம் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவது என்று நடிப்பின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார். குடும்பமும் காரும் ஒரே நேரத்தில் சின்னா பின்னமாகும் அந்த சூழல் வந்த பிறகு தன்னுடைய விஸ்வரூபத்தை எப்படி வெறித்தனமாக காட்டுகிறார் என்பதை மிகவும் தத்ரூபமாக சிறந்த நடிப்பின் மூலம் மிரட்டி இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி வாங்குவதற்காக ஆக்ரோஷமாக மாறி களம் இறங்கும் போது, அதிரடி சண்டைக்காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, துணை ஆய்வாளராக நடித்திருக்கும் பினு பப்பு இருவரின் வில்லத்தனதமான நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார்கள்.
மோகன்லாலின் மனைவி. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷோபனா, தன் அனுபவமான நடிப்பு மூலம் வரவேற்பு பெறுகிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பர்ஹான் பாசில், மோகன்லால் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாமஸ் மேத்தீவ், மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிர்தவர்ஷினி, ஷாஜி அடிமல்லி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஷாஜி குமார் ஒளிபதிவில் காடு, மலை போன்ற இயற்கை எழில் நிறைந்த பகுதிகளை படமாக்கி காட்டி இருப்பதை பாராட்டலாம்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்களும், கதைக்களத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்யும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு படத்தை எந்த அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய இயக்கத்தினால் உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக சிறப்பாக திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி. கேரளாவிலும் ஜாதிப் பிரச்சினை காதல் கல்யாணத்தில் நிறையவே தலை தூக்கும் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.
மொத்தத்தில், ‘தொடரும்’ படம் ஆக்சன் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.