‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ -திரைப்பட விமர்சனம்!

111

சென்னை:

சந்தானம், கீதிகா திவாரி, கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, மாறன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான்  ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’…இப்படத்தை காமெடி கலந்த முறையில் கதை எழுதி இயக்கியிருக்கிறார் பிரேம் ஆனந்த்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

‘தில்லுக்கு துட்டு’  படம் வெற்றி அடைந்ததால், அதனை தொடர்ந்து இரண்டாவது  பாகத்தை எடுத்த சந்தானம் தற்போது ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையை முன்னிருத்தி எடுத்த மூன்றாம் பாகம்தான் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’..

திரையரங்கில் வெளியாகும் பல புதிய படங்களின் விமர்சனங்களை யூடியூப் ஒன்றில் விமர்சகராக செயல்படுகிறார் சந்தானம். இவர் செய்யும் விமர்சனம் மூலம் பல படங்கள் தோல்வி அடைகிறது. ஒரு நாள் ஒரு தமிழ் படத்தின் சிறப்பு காட்சிக்கு சந்தானத்தையும், அவரது குடும்பத்தையும் வருமாறு அழைப்பு விடுக்கிறார் இருதயராஜ் என்கிற செல்வராகவன். அந்த அழைப்பின் பெயரில் அவரது குடும்பத்தினர் நிழல் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அந்த சிறப்பு காட்சி நடக்கும் திரையரங்கில் பேய்கள் மூலம் ஆபத்து இருப்பதை உணர்ந்த  சந்தானம் தந்தை நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி, காதலி கீதிகா திவாரி  ஆகியோரைக்  காப்பாற்றுவதற்காக அந்த திரையரங்குக்கு செல்கிறார். அந்த பேய் ஆளும் திரையரங்கிற்குள் உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுகிறது.

தனது குடும்பத்தையும், காதலியையும் காப்பாற்ற சென்ற சந்தானமும் அந்த பாழடைந்த திரையரங்கிற்குள் உள்ளே சென்றபோது மாட்டிக் கொள்கிறார். அந்த சமயத்தில் வீண் பேச்சு மொட்டை ராஜேந்திரனும் அங்கு செல்ல அவரும் அந்த திரையரங்கிற்குள் மாட்டிக் கொள்கிறார். அந்த திரையரங்கில் உள்ள திரையில் படம் பார்க்கும்போது திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாறி அந்த கதைக்குள் அனைவரும் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த குரூப்பில் ரெடின் கிங்லியும் , கெளதம் வாசு தேவ மேனனனும் இருக்கிறார்கள். திரையில் வரும் அந்த திரைப்படம் பேய்கள் மற்றும் கொலைகாரர்கள் கலந்து வரக் கூடிய ஓர் அதிரடிக் கதையுடன் செல்கிறது. இந்தக் கதையில் பலமாக சிக்கிக் கொண்ட சந்தானம் அதிலிருந்து மீண்டு வந்தாரா….தனது குடும்பத்தினரையும், காதலியையும் எப்படி காப்பாற்றினார் என்பதுதான்  ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’..படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தன்னுடைய உருவம், சிகை அலங்காரம், தோற்றம் மற்றும் நடை உடை பாவனைகளில் மாற்றம் காட்ட முயற்சி செய்து இருக்கிறார். அவருடைய மெட்ராஸ் வசன உச்சரிப்பு முறை அவருக்கு இந்தப் படத்திலும் பலமாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் காட்டாமல் ஒரே மாதிரியான வழக்கமான ஸ்டைலில் நடித்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

கதாநாயகியாக மட்டும் இல்லாமல் பேயாகவும் நடித்திருக்கும் கீதிகா திவாரியின் கதாபாத்திரம் குறைவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

செல்வராகவன் பேயாக வந்து மிரட்டுகிறார்.

மொட்டை ராஜேந்திரனுக்கு எலியை வைத்து காமெடி, நிழல்கள் ரவிக்கு எப்போதும் டாய்லெட்டில் இருக்கும்  காமெடி, ரெடின் கிங்ஸ்லிக்கு கால்களில் இரண்டு சொம்பு மாட்டிக் கொள்ளும் காமெடி, மாறனுக்கு கஸ்தூரியின் பின்னாலேயே சென்று  சைட் அடிக்கும் காமெடி, கௌதம் மேனனுக்கு யாசிகாவை காதலிக்கும் காமெடி என ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதத்தில் காமெடி காட்சிகளில் நடித்திருப்பது அனைவரையும் சிரிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், எடுபடவில்லை.

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு மூலம் அனைத்து காட்சிகளையும் வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குனர் எஸ். பிரேம்ஆனந்த் ஒரு கஷ்டமான கதையை  தொடர்பு இல்லாத சில காமெடி காட்சிகளை வைத்து சில இடங்களில் புரியும்படியும், பல இடங்களில் புரியாதபடியும் நகைச்சுவை படமாக கொடுத்து இருக்கிறார். தான் எடுத்துக் கொண்ட விசயத்தை சுவாரசியமாகச் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சியில் நல்ல படமாக இருந்தால் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் கண்டிப்பாக நன்றாக ஓடும் என்கிற கருத்தைச் சொல்லியிருப்பதை  பாராட்டலாம்.

மொத்தத்தில், ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் பேய் வந்தாலும் ரசிக்க முடியவில்லை.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.