சென்னை:
லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்து, ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் வெளியீட்டிருக்கும் மாமன் படத்தை எழுதி இயக்கpயிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், நிகிலா ஷங்கர், கீதா கைலாசம், உன்னி முகுந்தன், ஜெயபிரகாஷ், மாஸ்டர் பிரகீத் சிவன் ம்ற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து விட்டு, தற்போது சூரி கதை நாயகனாக உயர்ந்து விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு உணர்ச்சிகளின் கொந்தளிப்பைக் கொட்டி நடித்திருக்கும் படம்தான் ‘மாமன்’.
சூரி திருமணமான தன் அக்கா சுவாசிகா மீது அதிக அளவில் அன்பை வைத்திருக்கிறார். தன் அக்காவுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்தும் குழந்தை இல்லை என்ற மனக்குறை தெரியாமல் பார்த்துக் கொண்டாலும், உறவினர்கள் மத்தியில் மலடி என்ற பேச்சுக்கு மிகுந்த வேதனைப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார். இதனால் சோகத்தில் இருக்கும் சுவாசிகா பத்து ஆண்ட்டுகளுக்குப் பிறகு அவர் கர்ப்பம் தரிக்கிறார். குழந்தை இல்லாமல் காத்திருந்த சுவாசிகாவுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தைக்கு தாய்மாமனான சூரி உயிருக்கு உயிராக பாசம் வைத்து வளர்க்கிறார். தன் அக்கா சுவாசிகாவின் குழந்தையை வளர்ப்பது,சாதம் ஊட்டுவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற எல்லாவற்றையும் அன்புடன் செய்கிறார் சூரி. அக்கா மகனும் பெற்றோரை விட சூரியுடன்தான் அதிக பாசத்துடன் இருக்கிறார்.
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி சூரியின் அக்கா பிரசவம் பார்த்து அந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அங்கு தனது அக்காவுக்கு பிரசவம் பார்க்கும்போது சூரி தன் குடும்பத்தினர் மீது உள்ளவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துவதைக் கண்டு அவர் மீது காதல் கொள்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது காதலை ஏற்றுக் கொண்ட சூரி திருமணம் செய்துக் கொள்கிறார். ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் இல்லற வாழ்க்கையில், அக்கா சுவாசிகா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. முதலிரவு அன்று கூடவே அக்கா மகனும் வந்து படுத்துக் கொண்டதால் சூரிக்கு ஒன்றும் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.
அதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா லட்சுமி சண்டையிட, அதுவே இருவருக்குள் மோதலாக வெடிக்கிறது. இதனால் சூரி குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் இரு குடும்பங்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. அக்கா சுவாசிகா, தம்பி சூரி இருவரிடையே பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கின்றனர். இறுதியில் ஐஸ்வர்யா லட்சுமியும், சூரியும் சமாதானமடைந்து ஒன்றாக இணைந்தார்களா? மாமன் சூரி, அக்கா மகன் இருவரது பாசம் வென்றதா? என்பதுதான் “மாமன்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சூரி,அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட ஒரு உன்னதமான கதாபாத்திரத்தை ஏற்று, அதன் தன்மையை உணர்ந்து அதற்குத் தக்கவாறு மிக சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில்அவரது நடிப்பு எடுபடவில்லை. குடும்பம் மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அழுத்தமான நடிப்பை கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை கனக்க வைத்து, அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார் சூரி.
சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, மனைவிகளின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது அழகான நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக அருமையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஜ்கிரண்- விஜிசந்திரசேகர் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ,ஒவ்வொரு குடும்பத்தின் வயதில் மூத்தவர்களையும் அவர்களுடைய அத்தியாவசியத் தேவையையும் உணர்த்தும் விதமாக அவர்களது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.
சூரியின் அக்காவாக நடித்திருக்கும் சுவாசிகா தனது கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார். குழந்தையில்லாத தவிப்பு, குழந்தையின் நலனுக்கான பரிதவிப்பு, கோபம் ஆகியனவற்றை வெளிப்படுத்திய விதத்தில் வரவேற்புப் பெறுகிறார்.
பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் கேட்குபடி இருக்கிறது. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் இருப்பதை பாராட்டலாம்.
தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாக அமைந்திருக்கின்றன. தனது ஒளிப்பதிவு மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகப்பெரிய அளவில் படமாக்கி பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் சூரியே தனக்கான கதை இதுதான் என்று எண்ணி எழுதியிருக்கிறார்.அதற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி குடும்பங்கள் ரசிக்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருத்திருக்கும் இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.
மொத்தத்தில், ‘மாமன்’ குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.