சென்னை:
‘தமிழ்க்குடிமகன்’ திரைப்பட புகழ் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் படம்தான் இந்த ‘பரமசிவன் பாத்திமா’. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக சாயாதேவி நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை, மேல் தட்டு மக்கள் தீண்டாமை என்ற காரணத்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பல கொடுமைகளை செய்தனர். இதனால் வேதனையுற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கிறிஸ்து மதத்திலும், முஸ்லிம் மதத்திலும் மாறிய விஷயம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதன் அடிப்படையில் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் கதையை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மதம் மாற்றம் காரணமாக மூன்று பிரிவுகளாக பிரிந்து இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், என மூன்று கிராமங்களாக பிரிந்து ‘சுப்ரமணியபுரம்’. ‘யோகோபுரம்’. ‘சுல்தான்புரம்’ ஆகிய பெயர்களை சூட்டி அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அடிக்கடி சண்டைப் போட்டுக் கொண்டு மதக் கலவரத்தை தூண்டி விடுகிறார்கள். இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே எப்போது பார்த்தாலும் சண்டைகளும், மோதல்களும் நடந்து கொண்டே இருப்பதால் இருதரப்பிலும் அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது என்று போர்டை ஊரின் எல்லையில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு திருமணம் நடந்தால் அன்றைய தினம் இரவில், மாப்பிள்ளை மட்டும் கடத்திச் சென்று கதாநாயகன் விமல் மற்றும் கதாநாயகி சாயாதேவி இருவரும் இணைந்து ஒரு பெரிய தண்ணீர் தொட்டியில் மூழ்க வைத்து கொலை செய்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து வேறு சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
காவல்துறையினர் இந்த கொலை வழக்கை விசாரிக்கும்போது குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலையில் அந்த ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் இந்தக் கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் நான் மலையில் இருந்து இறங்கமாட்டேன் என்று சொல்லி அங்கேயே தங்கி தன்னுடன் வந்த காவலர்களுடன் அமர்ந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் இந்த கொலைகளை இறந்து போன இரண்டு ஆத்மாக்கள் செய்வது காவல்துறைக்கு தெரிய வருகிறது. விமல்- சாயாதேவி இருவரும் இணைந்து திருமணம் நடக்க இருக்கும் முன் தினம் அந்த இளைஞர்களை கடத்தி எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே நடந்த விரோதம் என்ன? என்பதுதான் இந்த ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென நினைத்து நடித்திருக்கிறார் விமல்.அவருடைய எதார்த்த நடிப்பு அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது. ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாயாதேவி நன்றாக இருக்கிறார்.கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், காவலராக வரும் காதல் சுகுமார்,முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன், கூல் சுரேஷ் ஆகியோர், கிறித்துவமத பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர், சாமியாராக நடித்திருக்கும் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்றிருக்கும் மைனா சுகுமார் இந்தப் படத்தில் வில்லன் நடிகராக களமிறங்கி நடிக்க முயற்சி செய்து இருக்கிறார்.அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாகச் செய்திருக்கிறார்.
சுகுமாரின் அழகான ஒளிப்பதிவில் அந்த மலை கிராமம் அழகாக காட்சி அளித்தாலும் பல இடங்களில் ஒளிப்பதிவு மூலம் கழுகுப் பார்வைக் காட்சிகளில் கதை சொல்லவும் செய்திருக்கிறார்.
தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான்.
இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் இசக்கி கார்வண்ணன். மதமாற்றச் சிக்கலில் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற திரைக்கதை வசனங்களை எழுதியிருக்கிறார். கிறிஸ்தவ மத எதிர்ப்பு என்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், மதமாற்றம் என்பதை கிறிஸ்துவ அமைப்பினரை தாழ்த்தி, இந்து மத அமைப்பினரை உயர்த்தி இருப்பதை யாராலும் ஏற்க முடியாது. நமது தமிழ் நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாகத்தான் பழகி வருகிறார்கள் என்பதை இயக்குனர் மறந்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில், ‘பரமசிவன் பாத்திமா’ மத மாற்றத்தை தோலுரித்து காட்டும் படம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.