ZEE5 தளத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து ஓடிடி உலகில் புதிய சாதனை!
CHENNAI:
ZEE5 தளத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து ஓடிடி உலகில் புதிய சாதனையை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்னர் டிஜிட்டல் வெளியீடு கண்ட இந்த படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வலுவான கதைக்களத்தால் பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாகக் கவர்ந்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், SS லலித் குமார் உருவாக்கியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் தனது வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த கதையை வடிவமைத்துள்ளதும் படத்தின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கும், ஒரு விசாரணைக் கைதிக்கும் இடையே நடைபெறும் மனப்போராட்டமே ‘சிறை’ படத்தின் மையக்கரு. அதிகாரம், மனிதநேயம், மனசாட்சி ஆகிய மூன்றின் மோதலை உணர்வுபூர்வமாக முன்வைக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அனந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகர் இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் ஆகியவை படத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக வலுவான அடையாளம் அளித்துள்ளன. ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார்.
முன்னதாகவே ZEE நிறுவனம் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை கைப்பற்றியிருந்த நிலையில், ZEE5-ல் வெளியானதும் ‘சிறை’ பார்வையாளர்களிடையே வேகமாக பரவியது. சமூக வலைதளங்களில் கிடைத்த நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுகளும், இந்தப் படத்தை 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடக்கச் செய்துள்ளன.
மண் சார்ந்த உண்மை கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கும் ZEE5 தமிழின் பட்டியலில், ‘சிறை’ இன்று ஒரு முக்கியமான ஓடிடி சாதனை படமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. உணர்வையும், யதார்த்தத்தையும் ஒருசேர அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கு ‘சிறை’ ஒரு தவற விடக் கூடாத படமாக மாறியுள்ளது.