சென்னை:
சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா, சிறுவன் கரன் சக்கரவர்த்தி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, படவா கோபி, கார்த்திக் குமார், கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா, ஜெயந்தி, பேபி கே லயா நடித்துள்ள படம்தான் “கார்மேனி செல்வம்”
அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் சக்ரி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கடற்கரையோரம் குடிசை பகுதிக்கு மத்தியில் ஒரு சிறிய வீட்டில், கார் ஓட்டுநராகப் பணிபுரியும் சமுத்திரக்கனி, தன் மனைவி லக்ஷ்மி பிரியா மற்றும் மகன் பாலுவுடன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமுத்திரக்கனியின் மனைவி லக்ஷ்மி பிரியா ஒரு தள்ளுவண்டியில் இட்லிக் கடை நடத்தி கணவனுக்கு துணையாக இருக்கிறார். தன் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணக்காரர் கௌதம் மேனனிடம் கார் டிரைவராக பணி புரிகிறார். இந்த சூழலில் கௌதம் மேனன் வெளிநாடு சென்று விட்டதால், அவரது காரை மேனனுக்குத் தெரியாமலேயே கால் டாக்ஸி குரூப்பில் சேர்த்து பணம் சம்பாதித்து வருகிறார் சமுத்திரகனி.
தன் வருமானத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரது மனைவி சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி சொல்லி தூண்டி விடுகிறார். தன் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடும்போது சமுத்திரகனி கடனாளியாகி விடுகிறார். ஒவ்வொரு கடன்களை அடைக்க, மேலும், மேலும் கடன் வாங்கிப் பெரிய கடனாளி ஆகி விடுகிறார் . இதனால் கடனுக்கு பணம் கொடுத்த அனைவரும் சமுத்திரகனியின் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள். கடன் சுமையால் வேதனையில் இருக்கும் சமுத்திரகனி வேறு வழியே தெரியாமல், இவற்றில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்று வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். வெளி நாடு சென்ற சமுத்திரகனி, தான் வாங்கிய கடனை எல்லாம் அடைத்தாரா? இல்லையா? என்பதுதான் “கார்மேனி செல்வம்” படத்தின் மீதிக் கதை.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தத்ரூபமாக கையாண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார் சமுத்திரக்கனி. அது போல செல்வம் என்ற கதாபாத்திரத்திரத்தை உணர்ந்து தனது தோளில் சுமந்து இருக்கிறார். பல படங்களில் நல்ல அறிவுரைகளை சொல்லும் அவர் இந்தப்படத்தில் நன்றாக நடித்து படம் பார்ப்பவர்களுக்கு நல்லதை சொல்லி நம் மனதை கவர்கிறார்.
அவரது மனைவி சாந்தியாக லட்சுமி பிரியா சந்திரமெளலி. ஒரு நடுத்தர வர்க்கத்து தம்பதியாக அவர்களது அன்றாட வாழ்க்கையின் துன்பங்களை பார்க்கும்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படிதான் நடக்கும் என்பதை நினைக்கும்போது அனைவரையும் கலங்க வைத்து விடுகிறார்.
இவர்களின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தியின் நடிப்பும் அப்பா நீ அறிவாளிப்பா என்று அடிக்கடி சொல்லும் மகன் பாலு கதாபாத்திரத்தில் உருக வைக்கிறார்.
சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா இருவரும் தங்களுக்கு கொடுத்த பணியை குறைவில்லாமல் செய்து இருக்கின்றனர்.
இப்படத்தில் கார்த்திக் குமார், படவா கோபி, கோதண்டம், மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பரகோட் ஆகியோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு, நகர வாழ்க்கையின் நெருக்கடியை இயல்பாகப் பதிவு செய்து கதை சொல்லும் விதத்தை மிக சிறப்பாக காட்சிகளிலும் சரியாக வெளிப்படுத்தி கவர்கிறார்.
ராமானுஜத்தின் இசையில் பாடல்கல் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் ராம் சக்ரி, இந்த சமுதாயத்தில் எப்படி ஒரு மனிதனின் பேராசையால், பணத்தாசையாலும் எப்படி நிம்மதியைக் கெடுத்து வேதனையில் தள்ளுகிறது என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதனுக்கு தேவையற்ற ஆசைகளால், நிம்மதியற்ற வாழ்க்கை வாழும் அனைவருக்கும் நல்ல அறிவுரை சொல்வதோடு, எது வாழ்க்கை என்ற உண்மையை மக்களுக்கு புரிய வைக்கும் இயக்குநர் ராம் சக்ரியின் முயற்சி இப்படத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தத்தில், ‘கார்மேனி செல்வம்’ கடன் வாங்கி தவிக்கும் மக்களுக்கான படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.