’நீளிரா’ திரைப்பட விமர்சனம்!

28

சென்னை:

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் எஸ் – கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் நீளிரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சோமீதரன்.

இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், கபில வேணு, ரூபா கொடுவாயூர், வித்து, சித்து குமரேசன், நவயுகம், சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “நீளிரா”

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இலங்கையில் இந்திய ராணுவம் அமைதிப்படை என முகாமிட்டிருந்த நேரம் அது. அங்கு அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல் வலுத்து வந்த ஒரு காலகட்டம் இருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  ஒரு சாதாரண குடும்பம்… மகளின் திருமணத்தை நடத்தவே இராணுவங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை…ஏற்படுகிறது. அப்படி இரு ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி வாங்கிய பிறகு அடுத்த நாள் காலை திருமணம் நடக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் போர்ச்சூழல் ஏற்பட்டு இருப்பதால் சுதந்திரமாகத் திருமணம் நடக்க வேண்டிய குடும்பத்தில் ஒரு வீட்டுக்குள்ளேயே நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு திருமணம் நடத்த முடிவு செய்கிறார்கள்.  திடீரென அன்று இரவு நேரத்தில் எட்டு இந்திய அமைதிப்படை வீரர்கள்  அவர்களுடைய வீட்டின் முன்புறம் வந்து தங்குகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த திருமண வீட்டிற்குள் இந்திய இராணுவத்தினர் நுழைந்து அந்தக் குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள். அதே நேரம் இலங்கை போராளிகள் குழுவும் வீட்டை சுற்றிவளைத்து இந்திய அமைதிப்படையினரைத் தாக்க நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பத்தில் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதற்கு “”நீளிரா” படம் பார்த்தால் புரியும்.

இந்திய அமைதிப்படையின் தலைவராக நவீன் சந்திரா நடித்திருக்கிறார்.அதற்குரிய மிடுக்குடன் கடமைக்கும், மனிதாபிமானத்திற்கும் இடையே தவிக்கும் ஒரு அதிகாரியின் மனப்போராட்டத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

போராளிப் படைத் தலைவராக நடித்திருக்கும் சனத், திருமண வீட்டில் உள்ள மக்களுக்குப் பாதிப்பின்றி எதிரிப்படையைத் தாக்கவேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கும் அசல் போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.

ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக, சுவாதி கிருஷ்ணன் ஆகியோர் ஈழ பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் ஆகிய நடிகர்களின் கதாபாத்திரங்களும் நம்மை கலங்க வைக்கின்றன.

பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடப்பாதால், அதுவும் ஒரு வீட்டுக்குள்ளேயே இந்தப் படத்தின் கதை நகர்ந்தாக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற ஒளி அமைப்பின் மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன் .

கே இசையில் ஒரு பாடல் திருமண வீட்டின் மகிழ்ச்சியையும், ஈழ மக்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து இருக்கிறது.,பின்னணி இசையில் போராட்டக் காலகட்ட வலிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் சோமிதரன்.  ஒரு ஈழத் தமிழராகத் தனது மக்களின் வலியை எந்தவிதமான அதிகப்படுத்தலும் இன்றி, கதாபாத்திர உளவியலில் தீவிர கவனம் செலுத்தும் விதத்தில் எதையும் அநாவசியமாக  பேசி காட்சிகளின் நீளத்தை நீட்டிக்காமல், அனைத்தையும் மிக சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பேசியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. போர்ச் சூழலில் வாழும் மக்களை,அவர்களது  நெருக்கடிகளை, துன்பங்களை, துயரங்களை ,அவர்களது மன அழுத்தங்களை ஓரே இரவில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு கதையாக்கி நம்மை அவர்கள் உணர்வுகளில் ஒன்ற வைத்துள்ளார் இயக்குநர் சோமீதரன்.

மொத்தத்தில், ‘நீளிரா’  ஈழ மக்களுக்கு ஏற்பட்ட வலியை சொல்லும் படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.