சென்னை:
கதை திரைக்கதை எழுதி இருக்கும் தம்பி ராமையா, தனது மகன் உமாபதி ராமையாவை இப்படத்தின் மூலம் இயக்குனராக்கியுள்ளார். ஒளிப்பதிவு :பி.ஜி.முத்தையா, இசை: தர்புகா சிவா,எடிட்டிங்: ஆரல் ஆர். தங்ம். தயாரிப்பு: கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பீடாக் கடை வைத்து பிழைப்பு நடத்தியதால் நட்டி என்ற நட்ராஜை குல்கந்த் குமார் என்று அனைவரும் அழைக்கின்றனர். பீடா கடை நடத்தி வந்த இந்த சூழலில் குல்கந்த் குமார் ஒரு படத்தில் எதிர்பாராத விதமாக கதாநாயகனாகி வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த முதல் படம் வெற்றி பெற்றதால் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறார். இந்த சூழலில் எம்ஜிஆரின் ரசிகரான பொள்ளாச்சியில் செல்வாக்குள்ள பெரிய ஜமீன்தார் தம்பி ராமையா நட்டி நடித்த படத்தைப் பார்த்து அவரை எம்ஜிஆர் போல கொண்டு வர வேண்டும் என்று தன் சொத்துக்களை எல்லாம் விற்று நட்டிக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் அவரை முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார் தம்பி ராமையா.
இதே நேரத்தில் நட்டி நடித்த படங்கள் வெற்றி பெறுவதால் அவர் உச்ச நடிகர் என்று புகழின் உச்சிக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் உச்ச நடிகர் நட்டியை அரசியலில் ஈடுபட வைக்க ஆசை காட்டிய தம்பி ராமையா ஒரு அரசியல் கட்சி தொடங்குவதற்கு உதவி செய்கிறார். நடிகர் குல்கந்த் குமார் என்ற நட்டியை தலைவராக வைத்து ‘ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்க வைக்கிறார்கள். ஒரு நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாகி புகழின் உச்சியில் இருக்கும் குல்கந்த் குமார் என்ற நட்டியை தேர்தலில் நின்று முதலமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு ஆசையை தூண்டி விடுகிறார் தம்பி ராமையா. .2026 ஆம் ஆண்டில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சராவார் என்கிற ஆசையையும் விதைக்கிறார் தம்பி ராமையா. பல படங்களை நடித்துக் கொண்டிருந்த நட்டி அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதியாகும் போது பல சிக்கல்களையும், துரோகங்களையும் சந்திக்கிறார். இறுதியில் அவரது முடிவு என்ன? அவர் தேர்தலில் நின்று வெற்றி வாகை சூடினாரா? இல்லையா? என்பதை அரசியல் காமெடி கலந்த முறையில் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைக்கும் படம் தான் ‘டிஎன் 2026’ படத்தின் மீதி கதை.
குல்கந்த்குமார் என்கிற பெயரில் உச்சநட்சத்திரம் கதாபாத்திரம் ஏற்று மிக சிறப்பாக காமெடியில் கலக்கி இருக்கிறார் நட்டி எங்கிற நட்ராஜ். இப்படத்தில் ஆரம்பத்தில் வட இந்திய தமிழில் பேசுவது போல் கொஞ்சிப் பேசி அந்த கதாபாத்திரமாக நம் மனதில் ஊடுருவி, பிறகு அவர் நமது தமிழ் மொழியை தெள்ளத் தெளிவாக பேச கற்றுக்கொண்டு பெரிய நடிகராக வலம் வரும் தோற்றத்தில் நட்டி நடிப்பில் அசத்தி உள்ளார். இதற்கு முன் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நட்டியை பார்த்திருந்தாலும், ‘சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நட்டி அற்புதமாக தனது நடிப்பை வெளிபடுத்தி உள்ளார்.
ஜமீன்தார் சிவலிங்கம் மன்றாடியார் என்ற கதாபாத்திரத்தில் தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பின் மூலம் இப்படத்தின் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். அவர் பேசி நடிக்கும், வசனங்களும், அவற்றை அவர் உச்சரிக்கும் விதமும் திரையரங்கில் பல சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன.அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கியதால் அதற்கான இடங்களை அவரே தேர்வு செய்துக் கொண்டு காமெடியில் கலக்கிள்ளார்.
கதாநாயகிகளாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஆகிய மூவர் நடித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.
குல்கந்த் குமார் நட்டிக்கு உதவும் அவரது கட்சியைச் சேர்ந்தவராக இன்னொரு அரசியல்வாதியாக எம் எஸ் பாஸ்கர் வருகிறார் .அவர் தெற்கத்தி மொழி பேசிக்கொண்டு அந்தப் கதாபாத்திரத்தில் மறைந்த அரசியல்வாதி தாமரைகனியைப்போல் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்து உள்ளார்.
இன்னொரு கதாபாத்திரங்களில் வரும் இளவரசு, ரெடின் கிங்ஸ்லி இருவரும் அரசியல் நய்யாண்டி செய்து இதில் முடிந்த அளவிற்கு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் பல்வேறு காலகட்டங்களைக் கொண்ட கதைக்கேற்ப ஒளியமைப்புகளை வண்ணமயமாக வடிவமைத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்..பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.
“சுயேச்சை எம் எல் ஏ’ ‘அமைதிப்படை’ போன்ற படங்களுக்குப் பிறகு நல்ல அரசியல் நையாண்டி படம் வெளியாகவில்லை என்று நினைத்த நேரத்தில் தற்போது தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் வெளி வந்திருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அரசியல் தலைவராக வேண்டும் என்றும், அரசியலுக்கு வந்தவுடன் ஆட்சிப்பொறுப்பேற்றுவிட வேண்டு மென்றும் ஆசைப்படுகிற நடிகர்களுக்கு இந்தப் படம் சமகால அரசியல் நிகழ்வுகளின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படத்தில் பல காட்சிகளில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரையும் மையமாக வைத்து கதையில் பல சம்பவங்களை சொல்லும்போது நம்மை சிரிப்பில் ஆழ்த்தி விடுகிறார் இயக்குனர் உமாபதி ராமையா. அதுவும் ‘வாய்ப்பே இல்ல ராஜா’ என்று ஒரு வசனம் வரும் போது சீமானை நினைத்து தியேட்டரில் கைதட்டல் பெறூகிறது. இப்படி ஒரு அரசியல் நையாண்டிகளை கதைக் களமாக்கி இயக்கியிருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா தொடர்ந்து இது போன்ற காமெடி படங்களை இயக்க வேண்டும். அதில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
மொத்தத்தில், ’TN 2026’ அரசியல் நையாண்டி உள்ள காமெடி படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.