சென்னை:
கே.ஜெ.ஆர் ,விஜி வெங்கடேஷ் ,இசபெல்லா, வசுந்தரா,சிந்தூரி ,அஜித் கோஷி,ரமா,ரங்கராஜ் பாண்டே ,மோகன்ராம், மன்சூர் அலிகான் ,செல்வி,ஜானகி,ராம்ஜி,அருள் டி. சங்கர்,விமல்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “அங்கீகாரம்”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் தென்பாதியான்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள் பல வந்தாலும் அதில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சில படங்களில் சமுதாய சிந்தனைகளை குறிப்பிட்டு காட்டி வெளிவரும்போது அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறுகின்றன. அப்படி தமிழ் திரைப்பட உலகில் ஓர் அங்கீகாரம் பெறுமளவில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘அங்கீகாரம் ‘.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடிசை பகுதியில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டில் வீரராக திகழும் கே.ஜே.ஆர். துப்புரவு பணியாளராக உழைக்கும் தாய், வழக்கறிஞராக பயிற்சி பெற தங்கை, இவர்கள் மூவரும் தங்களது குடும்பத்தின் வாழ்க்கையை நம்பி வறுமையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள வீரனாக வெற்றி பெற்று விட்டால் தனது கனவுகள் நினைவாகி தன் குடும்பத்தின் வறுமையை போக்கி மறுமலர்ச்சி ஏற்பட முயற்சி செய்கிறான் கே.ஜே.ஆர். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடந்த தேசிய போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறான் கே.ஜே.ஆர். ஆனால் தடகள போட்டியில் கே ஜே ஆர் வரக்கூடாது என்ற சூழலில் எல்லா விதத்திலும் விளையாட்டை தேர்வு செய்யும் பொறுப்பாளர்கள் மிகவும் தடையாக இருக்கிறார்கள்.
ஆனால் எப்படியாவது காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கும் அவர் மாநில விளையாட்டுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பல இடங்களில் முறையிட்டாலும், அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் அவருக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பும் அங்கீகாரமும் அநியாயமாக பறிக்கப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த கே.ஜே.ஆர்,அனைத்து தகுதிகளும் இருந்தும், தனக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார். எந்த வழக்கறிஞரும் இல்லாமல் தனது பிரச்சனைக்கு தானே வாதிட்டு, விளையாட்டுத் துறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார். இந்த சூழ்நிலையில் எப்படி தடைகளை வென்று விளையாட்டு போட்டியில் கே.ஜே.ஆர்,கலந்துக் கொண்டாரா? இல்லையா? என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கும் படம் தான் ‘அங்கீகாரம்’.
விளையாட்டு வீரராக,கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கே.ஜே.ஆர். ஒரு தடகள விளையாட்டு வீரருக்கு உரிய அனைத்து உடல் கட்டோடும் மிடுக்கான தோற்றத்தோடும் அதே நேரம் நெருக்கடிகளைச் சந்திக்கும் மனதோடும் அவர் தனது தோற்றத்திலும் உடல் மொழியிலும் தனது நடிப்பிலும் சிறப்பாக வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.
அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் விஜி வெங்கடேஷ், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக நடித்திருக்கும் வசுந்தரா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின் தலைவராக நடித்திருக்கும் ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான், நீதிபதிகளாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் இப்படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களது பங்களிப்பை செய்து இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், இப்படத்தின் உணர்வுகளை இசை வழியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். பாடல்கள் மனதில் நிற்கின்றன; பின்னணி இசை பல காட்சிகளில் அளவாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.
ஏ.விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு விளையாட்டுக் களங்கள், நீதிமன்றக் காட்சிகள் மற்றும் சென்னையின் குடிசைப் பகுதிகளில் உணர்வுபூர்வமான நேரடியாக காட்சிகளை துல்லியமாக படமாக்கியிருக்கிறார்.
இயக்குனர் தென்பாதியான் ஒரு உண்மை கதையை இவ்வளவு எதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்து படமாக்கி இருப்பதை பாராட்ட வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் திறமை மட்டும் போதாது தனது அங்கீகாரத்திற்காகவும் போராட வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது என்பதைக் கோபத்துடனும் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். ஒருவனது திறமையையும் ஆர்வத்தையும் வைத்துக்கொண்டு அவன் அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இப்படத்தின் கதை படம் பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில், ’அங்கீகாரம்’ அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.