சென்னை:
வைஜெயந்தி மூவிஸ் சார்பில் நாக் அஸ்வின் தயாரித்திருக்கும் சிங் கீதம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இப்படத்தில் அகில்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டெபுடி,நிவேதா பெத்துராஜ்,ராகுல் ரவீந்திரன்துளசி, மகேஷ் அச்சந்தா, வம்ஷிதர்கவுடு,சிவநாராயணா, பானர்ஜி, ஸ்ரீமுக்தா மச்சா, ரச்சார ரவி, யோகி காத்ரி, ஜூனியர் ரேலங்கி, ஆனந்த்பாபு ,இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘சிங் கீதம்’.
ஒரு மோசடி தொடர்பாக ஜெயிலில் அடைக்கப்பட்ட அயான், பிறகு தண்டனை முடிந்து வெளியே வரும் அவர் தனது தந்தையின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்று வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் குபேரபுரம் என்ற கிராமத்திற்கு வருகிறார். அந்த குபேரபுரம் தங்க சுரங்கம் நிறைந்த பகுதி என்பதால் தங்கத்தை வெட்டி எடுக்கிறது ஒரு நிறுவனம். இதனால் பசுமையாக இருந்த அந்த பகுதி பாலைவனம் போல் மாறி விடுகிறது. கடைசியாக அந்த கிராமத்தில் ஒரேயொரு மரம் மட்டும் பசுமையாக அந்த இடத்தில் இருக்கிறது. அந்த கிராமத்திற்கு அயான் சென்றதும், அந்த தங்க சுரங்கத்தின் மற்றொரு உரிமையாளர் தனது தந்தை என்பதை அறிந்துக் கொள்கிறார்.
அப்போது அங்கு இருக்கும் அந்த மரத்தை தனது தாயாக நினைக்கிறாள் கௌரி என்கிற அகில்யா பம்ரூ. அந்த மரத்தை வெட்ட வருபவர்களைத் தடுத்து அவள் பல விதத்தில் போராடினாலும் அந்த மரம் தங்கத்தை வெட்டி எடுக்கும் நிறுவன பெண் அதிகாரி மூலம் வெட்டி வீழ்த்தப்படுகிறது. இந்த சமயத்தில் கௌரி என்கிற அகில்யா பம்ரூவுடன் அயான் நட்புடன் பழகுகிறான். அவன்தான் அந்த தங்க சுரங்க முதலாளியின் உண்மையான வாரிசா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சூழலில் பசுமையான மரத்தை வெட்டி வீழ்த்தியதால் திடீரென்று ஊர் மக்கள் அனைவரும் வாய் பேச்சு மறந்து எல்லாவற்றையும் பாடல்களாக பாடி பேச வேண்டி நிலைமை உருவாகிறது. மக்கள் மட்டும் அல்ல, குபேரபுரத்தில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது. இதனால் அங்குள்ள மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை,குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருதுகிறார்கள். நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாட்டு பாடுவது போல் பேச ஆரம்பித்ததால், அந்த சாபத்திலிருந்து குபேரபுர மக்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதுதான் ‘சிங் கீதம்’ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், தொடக்கத்தில் கலகலப்பான ஒரு இளம் வாலிபராக வலம் வருகிறார். அவர் இயற்கையை நேசிக்கும் மனிதனாக மாறும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்துள்ள அகில்யா பம்ரூ, இயற்கையை நேசிக்கும் பெண்ணின் உறுதியையும், சமூக அக்கறையையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான அப்பாவித்தனத்தையும் மற்றும் தனது அழகையும் அனைவரும் ரசிக்கும்படி நடித்து கவனம் ஈர்க்கிறார்.
தங்கச்சுரங்கத்தின் நிறுவனராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, பாட்டியாக வரும் பழம்பெரும் நடிகை துளசி, சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பானர்ஜி, வம்சி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை மிகவும் இயல்பாக செய்து இருக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா ஒரு சிறப்புத் தோற்றத்தில் இரண்டாவது பாதியில் வந்து வியக்க வைத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த படத்தின் வசனங்களை பாடல்களாக பதிவு செய்து படம் முழுவதும் ரசிகர்களை இசை மழையில் மூழ்கடிக்க செய்து, பின்னணி இசையையும் பல காட்சிகளின் உணர்வுகளை கவரும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
அங்குர் சஞ்சீவின் ஒளிப்பதிவில் வறண்ட குபேரபுரம் கிராமத்தையும், அந்த ஒற்றை பசுமையான மரத்தின் அழகையும் ஒரு மாறுபட்ட கோணத்தில் படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
சிங்கீதம் சீனிவாசராவ் இந்த 94 வயதிலும் இவ்வளவு புதுமையான சிந்தனையுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பதை பார்க்கும்போது அவரை பாராட்டாமல் இருக்க முடியுமா? இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் தொடங்கியதும் சில காட்சிகளுக்குப் பின் முழுக்க முழுக்க பாடல்களாக ஒலிக்கும் போது முதலில் சலிப்பும் அலுப்பும் ஏற்பட்டாலும் கதையோடு ஒன்றிப்போகும் போது ஒரு கற்பனையும், மனிதநேயமும் இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை உணர வைத்து இருக்கிறார் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ்.
மொத்தத்தில், ‘சிங் கீதம்’ ஒரு வித்தியாசமான முயற்சி.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.