‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்!

11

சென்னை:

வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா ,மாறன், சரவணன் ,லிஸி ஆண்டனி, அருவி மதன் கன்யா பாரதி, சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ‘ இப்படத்தை கன்னட இயக்குனரான தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியிருக்கிறார்

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

நடிகர் வெற்றி கல்லூரியில் நன்றாக படித்து விட்டு வேலையில்லாத காரணத்தால் வறுமை வாட்டி வதைக்கிறது.  இந்த சூழலில் அவர் தன் நண்பன் மாறனுடன்  இணைந்து சின்ன சின்ன திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்கிறார் வெற்றி. இந்த சூழலில் பொறுப்பில்லாத தன் பெற்றோர் வறுமை காரணமாக தங்களது விவசாய நிலத்தின் பத்திரத்தை கந்துவட்டி ரெட்டியார் வீட்டில் கொடுத்து பணம் வாங்குகிறார்கள். ஆனால் வறுமையின்  காரணமாக ரெட்டியார் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.  அதனால் பல அவமானங்கள் ஏற்படுகிறது.  இந்த சூழலில் திருட்டு தொழில் செய்யும் நாயகன் வெற்றி அந்த கிராமத்தில் பாலில் தண்ணீர் கலந்து விற்று ஏமாற்றும் பிரிகிடா சகாவை காதலிக்கிறார். வெற்றி ஒரு திருடன் தெரிந்தும் பிரிடா சகா அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்ற பிறகும் திருட்டுத் தொழிலில் ஈடுபடும் தன் கணவன் வெற்றியை திருந்தி வாழுமாறு வேண்டுகிறார்.  இந்த சூழலில் கடைசியாக ஒரு முறை திருட  செல்கிறேன் என்று கூறி கந்து வட்டி ரெட்டியார் வீட்டில் இருக்கும் தங்களது பத்திரங்களை திருட செல்லும்போது, ரெட்டியாருக்கும் வெற்றிக்கும்  மோதல் ஏற்பட்டு அவரை கொலை செய்து விடுகிறார் வெற்றி.  இந்த சூழ்நிலையில் காவல்துறை வெற்றியை கைது செய்கிறது. அவரை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கும்போது வெற்றிதான் குற்றவாளி என்று நிரூபணம் ஆன பிறகு  நீதிபதி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கிறார். இறுதியில் வெற்றி நீதிபதி விதித்த தூக்கு தண்டையிலிருந்து தப்பித்தாரா? இல்லையா??  என்பதுதான் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ படத்தின் மீது கதை.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, அலட்டல் இல்லாத, அளவானநடிப்பு, பதற்றம் இல்லாத சிறந்த வசன உச்சரிப்பு மூலம் தூக்கு தண்டனை கைதியாக அறிவுமதி என்ற பொருத்தமாக கதாபாத்திரம் ஏற்று அனைவரும் ரசிக்கும்படி சிறப்பாக அற்புதமாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியிடம் நக்கலும் நையாண்டியுமாகச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போது சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக பிரிகிடா சகா நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து பெண்ணாக வருகிறார். காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும்,  தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இதுவரை அரசியல் விமர்சகராக மட்டுமே அறியப்பட்ட ரங்கராஜ் பாண்டே. இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, தன்னுள் இருக்கும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிகம் பேச வாய்ப்பில்லாத தூக்குப் போடும் நபரின்  கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சுப்ரமணிய சிவா.

வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.

எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிராமப்புற சூழல், சிறைச்சாலை அமைப்புகள், காலத்திற்கேற்ற காட்சியமைப்பு என ஒளிப்பதிவில் அதிக கவனம் செலுத்தி உழைத்து இருப்பது நன்றாக தெரிகிறது.

தர்புகா சிவாவின் இசையில் பாடல் வரிகளான பாரதிதாசனின் முத்தம் கொடு பாடல் நம் மனதை கவர்கிறது. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை இயல்பாக உயர்த்துகிறது.

கவிதாபாரதி மற்றும் தயாள் பத்மநாபன் ஆகிய இருவரும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அனைவரும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

1944 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளைப்பற்றி அவதூறாக பத்திரிக்கையில் எழுதியதால், சென்னையில் நடந்த சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கிற்கும், இந்த படத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாமல், ஒரு தூக்கு தண்டனை கைதியின் மரண தண்டனையும் ஒரு கொலை தான், என்ற வாதத்தை முன் வைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். ஒரு எளிமையான, உன்னதமான கதையை எடுத்துக்கொண்டு அதை மனித உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் வகையில் கையாண்ட விதம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.