சென்னை:
பிரித்விராஜ் சுகுமாரன்,பார்வதி திருவோத்து,ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால்,சங்கர் ராமகிருஷ்ணன்,நக்ஷத்ரா நடித்துள்ள படம்தான் “ஐ நோபடி”. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நிசாம் பஷீர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ராஜீவன் என்ற பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு வங்கிக்கு செல்கிறார். அவரது மனைவி தனியார் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் மீரா என்ற பார்வதி பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் என ஒரு சிறிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். பிருத்விராஜ் அந்த வங்கியில் அமர்ந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அங்கே முகமூடி போட்ட மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைகிறது. அந்த வங்கியில் துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டி 17 கோடி ரூபாய் கொள்ளை அடித்து விட்டுப் பணயக் கைதியாக பிருத்விராஜையும் பலவந்தமாக அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்திய அந்த காரிலிருந்து இன்னொரு காருக்கு மாறுகிறார்கள். அப்போது மாறியதும் பிருத்விராஜிற்கு கருப்பு துணியால் கண்ணைக் கட்டி விட்டு நெடுஞ்சாலை நடுவே அவரை இறக்கி விட்டு தப்பித்து விடுகிறார்கள்.
அந்த கொள்ளையர்கள் பதற்றத்துடன் தப்பித்து ஓடும்போது நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்து விடுகிறார்கள். கொள்ளையர்கள் விபத்தில் உயிரிழந்த பிறகு கொள்ளையடிக்கப்பட்ட 17 கோடி பணம் காணாமல் போய் மாயமாகிறது. வங்கியில் 17 கோடி பணம் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க காவல் துறை பிருத்விராஜிடம் விசாரணை செய்கிறார்கள். அவருக்கும், இந்தக் கொள்ளைக் கும்பலுக்கும் எதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது என காவல் துறைக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், அந்த வங்கியில் தனக்கும், தனது குடும்ப நபர்களுக்கும் கணக்கும், எந்தவித தொடர்பும் இல்லாத பிரித்விராஜ் அங்கு சென்று வங்கி ஊழியர்களிடம் எந்தவித உதவியும் கேட்காமல் நீண்ட நேரமாக அங்கு அமர்ந்து இருந்த காரணம் என்ன? என்ற கேள்வி காவல்துறைக்கு எழுகிறது. அந்த கோடிகணக்கான பணம் பிருத்திவிராஜிடம் இருப்பதாக போலீஸாரும், பொதுமக்களும் நம்பத் தொடங்குகிறார்கள். அதனால் பிருத்திவிராஜ் மற்றும் அவருடைய குடும்பத்துக்குப் பெரும் சிக்கல்கள் ஏற்படுகிறது அந்த சிக்கல்களிலிருந்து பிருத்திவிராஹும், அவரது குடும்பமும் மீண்டு வந்தார்களா?இல்லையா? என்பதுதான் “”ஐ நோபடி” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தின் நாயகன் பிருத்விராஜ் சுகுமாரன், ராஜீவன் கதாபாத்திரத்தில் முழுமையாக அதை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். காவல் துறையினரால் ஒவ்வொரு முறையும் அவர் அவமானப்படும் பொழுது பக்கத்து வீட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அவர்களை விரோதிகளாக பார்க்கும்போது அந்த நேரத்தில் தன்னுடைய உணர்வை காட்ட முடியாமல் தவிக்கும் பிரித்விராஜின் நடிப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்று சொல்ல வேண்டும். தனது முகபாவனைகள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் சிறந்த முறையில் தன்னுள் உள்ள நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார்.
கதாநாயகனின் மனைவியாக ‘பூ’ படப்புகழ் பார்வதி நடித்துள்ளார். தன் கணவனுக்காக பல துயரங்களை எதிர் கொள்ளும் மனைவியாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார். எதையும் பேசாமல் மௌனமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழும் ஒரு குடும்பத் தலைவியாக அவர் வாழ்ந்திருக்கிறார்.
ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து அதற்கு தேவையான வலிமையை சேர்த்து நடித்துள்ளனர்.
கதாநாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா, ஐரா இருவரும் அதிகம் பேசாமலேயே தங்கள் திறமையை க் காட்டி நடித்துள்ளார்கள்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தின் பதற்றமான சூழலை அழகாக பதிவு செய்கிறது.இப்படத்தில் வரும் இரவு காட்சிகள், துரத்தல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் ஆங்காங்கே பிறமொழிப் பாடல்கள் ஒலித்தாலும், பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருக்கிறது.
சமீர் அப்துல் எழுத்தின் தன்மையை குறைக்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நிசாம்பசீர். தற்போது வெளிவரும் வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இதுவரை திரையில் அதிகம் காணாத புதிய அணுகுமுறையுடன் இந்தப் படத்தை இயக்கிய விதம் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அடுத்த நொடியில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து இருக்கையின் நுனியில் அமர வைத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘ஐ – நோபடி’ படம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.