‘அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்!

66

சென்னை:

பாரி இளவழகன்,ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி,பரிதாபங்கள் கோபி,செல் முருகன்,நிகிலா சங்கர்,இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “அன்பே டயானா” இந்தப் படத்திற்கு கதை எழுதி, இயக்கி இருக்கிறார் பாரி இளவழகன். இவர் ஏற்கெனவே ‘ஜமா’ படத்தின் மூலம் தனது தனித்துவமான இயக்குநர் அடையாளத்தை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

வட சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சேத்தன்- ரோஜா தம்பதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். இளைய மகன்தான் பாரி இளவழகன். இந்த சூழலில் ரோஜாவின் கணவர் சேத்தன் தினமும் மது குடித்துவிட்டு வருவதால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ரோஜா தோசை மாவு விற்கும் கடை நடத்தி வருகிறார்.  அதில் வரும் வருமானத்தைக் கொண்டு சொந்த வீடு வாங்குகிறார். அதே சமயத்தில் தங்களது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல பணியில் இருப்பதற்கு உதவி செய்கிறார்.  மது குடிக்கும் பழக்கம் உள்ள சேத்தன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வேதனை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனாலும் ரோஜாவை திருமணம் செய்து கொண்டு வேண்டா வெறுப்பாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் அவரது இளைய மகன் பாரி இளவழகன் ஒரு ஆங்கில இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலிக்கிறார். தன் மகன் காதலிப்பதை கண்ட சேத்தனுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் தோல்வி ஏற்பட்டதால்,  மகன்  பாரி இளவழகனின் காதலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அவருக்கு பச்சை கொடி காட்டுகிறார் சேத்தன்.  ஆனால் ரோஜா தனது தெலுங்கு ஜாதியில் உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுகிறார்.  இதனால் மனம் வேதனடைந்த பாரி இளவழகன் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்.  ஆனாலும் தாயின் சொல்லுக்கு கட்டுபட்டு மறுக்க முடியாமல் அவரது தம்பி செல் முருகன் மகளை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். திருமண ஏற்பாடும்  நடக்கிறது.  திருமணநாள் வந்ததும் அன்று பாரி இளவழகன் செல் முருகனின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? அல்லது அவர் காதலித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ரம்யா ரங்க நாதனை மண முடித்தாரா?  என்பது தான் “அன்பே டயானா”  படத்தின் மீதி கதை.

ஜமா என்ற தெருக்கூத்து படத்தை இயக்கி நடித்து ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் பாரிஇளவழகன்..ஒரு பெண்ணை காதலிக்கவும் ஆசை ஆனால் அம்மாவிடம் சொல்லவும் பயம் என்ற குழப்பத்தில் தவிக்கும் அந்த கதாபாத்திரத்தில் அவர் இயல்பாக நடித்திருக்கிறார். இயக்குநராக மட்டுமல்ல, நடிகராகவும் நம்பிக்கை அளிக்கும் நடிப்பை வழங்கியுள்ளார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? படத்தில் சிறிய வேடத்தில் நடித்து பெரும் கவனம் ஈர்த்த ரம்யா ரங்கநாதன்,இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  தனது அழகான முகத்தால் அந்த மேஜிக் கோன்சால்வ்ஸ்  பாத்திரத்திற்கு பெரிய அளவில்  பலம் சேர்த்திருக்கிறார். சுறுசுறுப்பான பெண்ணாக எதையும் முகத்துக்கு எதிரே  கேட்டு விடும் அந்தப் கதாபாத்திரம் தற்காலப் பெண்களின் குணத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தி, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவே நடித்து அனைவரையும்  நம்ப வைக்கிறார்.

கதாநாயகனின் தந்தையாக குடித்துவிட்டு மனைவியுடன் வீரம் பேசும் ஆதிநாராயண பாஸ்கர்  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன்,  மது குடித்து விட்டு வரும் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

தன் பிள்ளைகளிடம் கண்டிப்பும் ஜாதிப்பற்றும் கொண்ட குடும்பத் தலைவியாக, பொறுப்பில்லாத தனது கணவணை நம்பாமல் ஒரு குடும்பத்தைத் தூக்கி சுமக்கும்  சரளா என்ற கதாபாத்திரத்தில் ரோஜாவின் நடிப்பு அபாரம்.  தெலுங்கும் தமிழும் கலந்து பேசுவது சரியான நகைச்சுவையாக இருந்தாலும் அது அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

கதாநாயகனின் நண்பனாக பெங்களூர் தமிழர் கதாபாத்திரத்தில்  வரும் ,பரிதாபங்கள் கோபி தன் அசட்டுத்தனங்களால் சிரிக்க  வைக்கிறார். மேலும் படத்தில் செல்முருகன், நிகிலா ஷங்கர், கிருஷ்ணர் பானு சுதர்சன் பாண்டி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களால் கதைக்கு ஏற்றவாறு   நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களே வியக்கும் விதத்தில் பெரம்பூர் பகுதியை  மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பரத்சங்கரின் இசையில் பாடல்கள் கேட்டு ரசிக்கும் ரகம்தான். பின்னணி இசையிலும் கதைக்கு ஏற்றவாறு  பலம் சேர்த்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன், இது போன்ற கதைகள் பல வந்திருந்தாலும் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு இந்துக் குடும்பமும் கிறிஸ்தவ குடும்பமும் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சாதி, மதம், மொழி என இரண்டு குடும்பங்களையும் ஒன்றிணைத்து  கைதட்டல் பெருமளவுக்கு அமைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘அன்பே டயானா’  ஜாதி, மதம் பேதமில்லாமல் பார்க்கும் படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.