‘சண்டக்காரி ‘ – திரைப்பட விமர்சனம்!

5

சென்னை:

விமல், ஸ்ரேயா சரண், புன்னகை பூ கீதா, சத்யன் ,பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, தேவ் ஹில், உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “சண்டக்காரி”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதேஷ்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

லண்டன் மாநகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரியாக இருக்கிறார் நாயகி ஸ்ரேயா. அவர் தன்னிடம் அதிகாரம் மட்டுமல்ல ஆணவ குணமும் கொண்டவர் என்பதால் அவரைக் கண்டாலே அலுவலகம் பதற்றம் அடையும் அளவிற்கு மிக திமிராக நிறுவனத்தில் பணி புரியும் அனைவரும் வெறுக்கின்ற மாதிரி நடந்துக்  கொள்கிறார். அவரது நிறுவனத்தில் தமிழக கிராமத்தில் இருந்து சென்ற விமல், ஸ்ரேயாவுக்கு உதவியாளராக வேலையில் சேர்கிறார், ஸ்ரேயாவிடம் உதவியாளராக வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் அவரது கோபத்தை தாங்க முடியாமல் சில நாட்களிலேயே வேலையை விட்டு ஓடியிருக்கும் இந்த நிலையில்தான் அவருக்கு புதிய உதவியாளராக சேர்கிறார் விமல். கோல்டு மெடல் வென்ற பொறியியல் பட்டதாரியாக இருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்ரேயாவுக்கு உதவியாளராக பணியாற்றும் விமல், அவரது கடும் கோபத்தினால் பல விதத்தில் பாதிக்கப்படுகிறார். மற்றவர்களைப் போல் வேலையை விட்டு ஓடாமல் அவருடைய கோபத்தையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார் விமல்.

இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைகிறது. இதற்கிடையே லண்டன் விசா பெறுவதற்கு பல முயற்சிகள் செய்தும் அது அவருக்கு கிடைக்காமல் போகிறது. ஸ்ரேயாவின் உயர் பதவி, லட்சக்கணக்கில் பணம் ஈட்டுவது போன்றவை கிடைக்க வேண்டுமென்றால், விமலைத் திருமணம் செய்து கொள்வது போல் நடித்தால் லண்டனில் தொடர்ந்து நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்கான விசா கிடைக்கும். என்று அந்த முயற்சியில் இறங்குகிறார். ஸ்ரேயா சொல்லும்  திட்டத்திற்கு சம்மதிக்கும் விமல், தமிழகத்தில் இருக்கும் தனது பெற்றோரை நேரில் சந்திக்க வேண்டும், என்று நிபந்தனை விதிக்கிறார்.

இந்த சூழலில் ஸ்ரேயாவின் எதிராளியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி இந்தத் திட்டத்தைத் தடுக்க நினைக்கிறார் விமல். தமிழக கிராமத்தில் இருக்கும் தங்களது பெற்றோரைச் சந்தித்துச் சம்மதம் பெற வேண்டும் என்ற விமலின் விருப்பத்தை ஏற்றுத் தமிழகம் வருகின்ற ஸ்ரேயாவுக்கு தனது லண்டன் விசா திட்டம் நிறைவேறியதா? விமலின் குடும்பத்திற்குள் ஸ்ரேயா வந்த பிறகு என்ன நடந்தது?  ஸ்ரேயாவின் எதிராளியுடன் கூட்டு சேர்ந்து விமல் நடத்திய ரகசிய திட்டம் முறியடிக்கப்பட்டதா? என்பதுதான்  ‘சண்டக்காரி’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக விமல், தமிழ்நாட்டு கிராமத்து இளைஞனாக மண்வாசனை மாறாத உதவியாளராகவும் வழக்கமான இயல்பான பாணியில் நடித்துள்ளார். லண்டன் நாட்டில் உள்ள காட்சிகளிலும் தமிழகத்தில் இடம்பெறும் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறார். அவரது நடிப்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா, லண்டன் விசா பிரச்சனையில் கவலையடையும் இடங்களிலும், பின்னர் கிராமத்துக் சூழலில் விமலுடன் இணைந்து ஆடும் நடனத்திலும்,  தனது ஸ்டைலான தோற்றத்தாலும் கவர்ச்சியாலும் நம்மை கவர்கிறார்.

விமலின் அப்பாவாக நடித்திருக்கும் பிரபு,அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன்,ஸ்ரேயாவின் நண்பியாக நடித்திருக்கும் புன்னகைப் பூ கீதா,சத்யன்,கே.ஆர்.விஜயா,ரேகா,தேவ் கில்,கிரேன் மனோகர்,மகாநதி சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் நகரத்தையும், தமிழக மண்ணின் கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை இயற்கை எழில் கூட்டுகின்ற வகையில் கலர்ஃபுல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

.அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையை காட்சிகளின் தன்மைகளை மட்டுமின்றி ரசிகர்கள் ரசிக்கின்ற மாதிரி மிக சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

ஆர்.மாதேஷ் கதை எழுதி இயக்கியிருக்கிறார். தற்போதுள்ள மாடர்ன் பெண்ணாக ஆணவமும் ஆவேச கோப குணமும் கொண்ட ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தையும் அப் பெண்ணின் மனதில் உருவாகும் காதலையும் சொல்ல முயற்சி செய்து, விமல்-ஸ்ரேயா இருவருக்கும் இடையேயான மோதல், காமெடி மற்றும் குடும்ப பின்னணி ஆகியவை ஆங்காங்கே புகுத்தி இப்படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா லண்டனில் குடியுரிமை பெறாமல் எப்படி மீண்டும் லண்டன் செல்ல முயலுகிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும் கமர்ஷியலாக கலகலப்பூட்டும் ஒரு காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘சண்டக்காரி’  இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றதாக இல்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.