‘அதோமுகம்’ – திரைப்பட விமர்சனம்!

194

சென்னை:

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘அதோமுகம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனில் தேவ். இதில் எஸ்.பி சித்தார்த், சைதன்யா பிரதாப், அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் எஸ்.பி. சித்தார்த் தான் பள்ளியில் படிக்கும் போது காதலித்த சைதன்யா பிரதாப்பை திருமணம் செய்து கொண்டு 200 ஏக்கரில் ஊட்டியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அசாமில் வசிக்கும் நண்பன் அனந்த் நாக் என்பவருக்கு சொந்தமான  200 ஏக்கரில் ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் எஸ்.பி. சித்தார்த், தனது அன்பான மனைவியுடன் மகிழ்ச்சியுடன் அழகான இயற்கை எழில்  சூழ்ந்த ஒரு அருமையான வீட்டில் வாழ்க்கையை நகர்த்தி வாழ்ந்துக்  கொண்டிருக்கிறார்.  எஸ் பி சித்தார்த்தின் பணி திறமையைக் கண்ட  பக்கத்து தேயிலை தோட்டத்தின் அதிபர் அவரது கடின உழைப்பை பார்த்து தன்னிடம் பணிபுரிய வருமாறு வற்புறுத்துகிறார். ஆனால் தன் நண்பனுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று எண்ணத்தில் அந்த அதிபரிடம் பணி செய்ய மறுத்து விடுகிறார் எஸ் பி சித்தார்த். என்றாவது ஒரு நாள் நீ என்னிடம் வருவாய் என்று அந்த அதிபர் எஸ் பி சித்தார்த்தை மிரட்டி விட்டு செல்கிறார்.

இந்த சூழ்நிலையில் எஸ் பி சித்தார்த் மனதில் ஒரு ஆசை ஏற்படுகிறது. தனது திருமண நாளில் மனைவிக்கு தெரியாமல் ஏதாவது ஒரு விதத்தில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது செல்போனில்  ஹிட்டன் ஃபேஸ் என்ற ஒரு ஆஃப்  ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் அவர் வீட்டில் தனிமையில் இருக்கும் போது என்ன செய்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்து அதை ஒரு தொகுப்பாக இணைத்து தன் மனைவிக்கு பரிசளிக்க விரும்புகிறார் எஸ்.பி சித்தார்த். அந்த செயலியை தன் மனைவி செல்போனில் பதிவிறக்கம் செய்து விட்டதால், தன் அலுவலகத்திற்கு சென்றவுடன் மனைவியின் செயல்களை கண்காணிக்க தொடங்குகிறார். அப்போது அவருடைய அன்பு மனைவியின் நடவடிக்கைகள் அனைத்தும் எஸ்.பி. சித்தார்த்திற்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒன்றுமே புரியாமல் மனைவியை பின் தொடரும் நாயகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.பி. சித்தார்த்தை  கொலை செய்ய வேண்டும் என்று அவரது மனைவிக்கு உத்தரவு வருகிறது.  அதை ஏற்று அவளும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு செல்கிறாள். தன் மனைவியின் நடவடிக்கைகளை கண்காணித்து பின் தொடர்ந்து போகும்போது தன் மனைவியை மிரட்டிய சரித்திரனை சைதன்யா பிரதாப் கொன்று விட அதிர்ச்சியாகிறான் எஸ்.பி. சித்தார்த். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதுதான் ‘அதோமுகம்’ படத்தின் மீதிக் கதை.

அறிமுக கதாநாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி. சித்தார்த் தமிழ் திரைப்பட துறைக்கு புதுமுக நடிகர் என்றாலும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து  கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரி மகன் என்கிற அடையாளத்துடன் வந்திருக்கிறார். மிக அப்பாவியான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சைதன்யா பிரதாப், புதுமுகம்தான் என்றாலும் ஆரம்பத்தில் அப்பாவித்தனமாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்தாலும், அதன் பிறகு மிக ஆபத்தான அழகியாக அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடவடிக்கைகள் மூலம் மிரட்டுகிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து மேலும் பயமூட்டுகின்ற காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.

சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பான நடிப்பு மூலம்  கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தின் இறுதியில் சிறப்புத் தோற்றத்தில் வரும் அருண்பாண்டியன் கதாநாயகனுக்கு அதிரடியாக உதவி செய்யும் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறார்.

மணிகண்டன்முரளியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. சரண்ராகவனின் பின்னணி இசை அளவுடன் பயணித்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார், வழக்கமான ஊட்டி அழகை தவிர்த்துவிட்டு, கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பது கதைக்களத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சுனில்தேவ். தற்போது உலகில் வாழும் அனைவரும் தினமும் உபயோகத்திக் கொண்டிருக்கும், நவீன கைபேசிகளில் உள்ள பேராபத்தை எடுத்துச் சொல்லி, அடுத்தென்ன என்பதை யூகிக்கமுடியாத வண்ணம் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளோடு விவரித்து, திரைப்படத்தை முழுவதையும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும் இயக்குநர் சுனில் தேவ்க்கு பாராட்டுக்கள்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.