சென்னை:
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன்.S. தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ‘சத்தம் இன்றி முத்தம் தா’ இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா மற்றும் பலர் நடித்திருக்கும், இப்படம் தற்போது பல திரையரங்குகளில் வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை ராஜ் தேவ். கதை எழுதி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
இப்படத்தின் முதல் காட்சி ஆரம்பிக்கும்போது ஒரு மிகப்பெரிய பங்களாவில் இரவில் முகமூடி அணிந்த ஒரு மர்ம உருவம் கையில் ஆயுதத்துடன் துரத்திக்கொண்டு வர, அச்சத்தில் நடுங்கியபடி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் ஓடுகிறார் கதாநாயகி பிரியங்கா திம்மேஷ். கொலையாளியிடம் இருந்து சாலையில் தப்பித்து ஓடும் போது கார் ஒன்று பிரியங்கா திம்மேஷ் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. அதனால் தலையில் அடிபட்டு, ரத்தம் வழிய சாலையில் மயங்கிக் கிடக்கிறார். அந்த வழியாக காரில் வந்த கதாநாயகன் ஸ்ரீகாந்த் பிரியங்கா திம்மேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மருத்துவமனையில் பிரியங்கா திம்மேஷுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில், தான் பிரியங்கா திம்மேஷின் கணவர் ரகு என்று ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
இந்த சம்பவத்தை பற்றி விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பெராடியைப் பார்த்து நைசாக அங்கிருந்து வெளியே செல்கிறார் ஸ்ரீகாந்த். அந்த மருத்துவமனையில் பல நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிரியங்கா திம்மேஷ் உயிர் பிழைத்தாலும், மூளையில் ஏற்பட்ட உள்காயம் காரணமாக கடந்தகால பழைய நினைவுகளை அடியோடு மறந்துவிடுகிறார். டிஸ்சார்ஜ் செய்தபின் அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த் . இந்த சூழ் நிலையில் ஸ்ரீகாந்தை கொலை செய்யும் எண்ணத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு மர்ம மனிதர்களை, பிரியங்கா திம்மேஷின் கண் எதிரே குத்திக் கொலை செய்து, அந்த பிணங்களை வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த். இதனைக் கண்டு பயந்து போன பிரியங்கா திம்மேஷ் ஸ்ரீகாந்தை விட்டு பிரிய முயல்கிறார். இப்படிப்பட்ட கொலைகாரன் என் கணவனாக இருக்க முடியாது என நினைக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவள் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அவனை நேசித்தவள் என்று அவளுடைய பள்ளி படங்கள் அடங்கிய புகைப்பட ஆல்பத்தை பார்த்த பின் அவள் ஸ்ரீகாந்தை நம்பத் தொடங்குகிறாள். ஒரு நாள் பிரியங்கா திம்மேஷ் தனது பழைய தோழி ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது, ஆனால் தோழியை நினைவுபடுத்தி பார்க்கும் போது பிரியங்கா திம்மேஷிற்க்கு அவர் யார் என்றா ஞாபகம் வரவில்லை. அவளது தோழி பிரியங்கா திம்மேஷின் திருமண படங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் போது தான், ஸ்ரீகாந்த் தன் கணவர் இல்லை என்பதும், தன் உண்மையான கணவர் பெயர் ரகு என்பதும் தெரிய வந்து அதிர்ச்சி அடைகிறாள். இந்நிலையில், ஓர் இளைஞர் வியான். அங்குள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரிடம், “என் பெயர் ரகு. இவர் என மனைவி என்று பிரியங்கா திம்மேஷின் புகைப்படத்தைக் காட்டி. சில நாட்களுக்கு முன்பிருந்து இவரைக் காணவில்லை” என புகார் கொடுக்கிறார். இதற்கிடையில் பிரியங்கா திம்மேஷின் கணவன் ரகுவாக ஏன் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்? பிரியங்கா திம்மேஷை கொல்ல முயன்ற அந்த மர்ம நபர் யார்? ஸ்ரீகாந்த் மற்றும் ரகு என்ற வியானிடமிருந்து பிரியங்கா திம்மேஷ் தப்பித்தாரா? என்பதுதான்’சத்தம் இன்றி முத்தம் தா’ படத்தின் மீதிக் கதை.
இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் சாந்தமான, எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அதே நேரம், ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷமாக அதிரடியில் இறங்கி, நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
பிரியங்கா திம்மேஷ் குழப்பம், பதட்டம், பயம் என அனைத்து முக பாவனைகளையும் மிக நேர்த்தியான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்தை திறம்பட நிரூபித்து காட்டியுள்ளார். பழைய நிகழ்வுகளை மறந்து இருக்கும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியக்கும்படி அருமையாக நடித்து இருக்கிறார்.
பிரியங்கா திம்மேஷின் கணவர் என சொந்தம் கொண்டாடும் இன்னொரு நபராக நடித்திருக்கிறார் வியான். இவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருந்துள்ள போதிலும், இவரது நடிப்பில் தெளிவு இல்லை. இவரது நடிப்பு படத்திற்க்கு வலு சேர்க்கவில்லை.
ஷீலா கதாபாத்திரத்தில் கவர்ச்சி ஆட்டம் போடும் நிஹாரிகா முக்கிய கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்வர்டாக நடித்திருக்கிறார் ஹரிஷ் பெராடி. நல்ல போலீஸ் அதிகாரியாகவே படம் முழுக்க வந்து தனது அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஜுபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓ.கே ரகம். குறிப்பாக, ‘செம்பரம்பாக்கம் ஏரியளவு” பாடலில் கிக் அதிகம். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை மிக சிறந்த முறையில் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்தேவ். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜானரில், ஆள்மாறாட்ட அம்சத்தை இணைத்து, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ள இயக்குனர் ராஜ்தேவ், இன்னும் கொஞ்சம் கதைக்கு ஏற்ற சில மாற்றங்கள் செய்து இருந்தால், கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ‘சத்தமின்றி முத்தம் தா’ திரைப்படம் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும்.
ரேட்டிங்: 2/5
RADHAPANDIAN.