CHENNAI:
இயக்குனர் சாந்தகுமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்தான் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு சித்த மருத்துவத்தை கற்றுக்கொண்டு கொடைக்கானலில் சித்த மருத்துவர் ஆக வாழ்ந்து வருகிறார். அமைதியான சூழலில் தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொடைக்கானலில் உள்ள மக்களுக்கு சித்தா முறையில் மருந்துகளை கொடுத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார் அர்ஜுன் தாஸ். அங்குள்ள இயற்கையைப் பேணி காப்பதும், பூச்சிகள் முதல் விலங்குகள் வரையிலான உயிர்களுக்கு இரக்கம் காட்டி மென்மையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அர்ஜுன்தாஸ்.
இந்த சூழ்நிலையில் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து விட்டு அந்த வேலை பிடிக்காமல், கொடைக்கானலில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜர் பணிக்காக வந்து சேர்கிறார் கதாநாயகி தான்யா ரவிச்சந்திரன். அந்த ஹோட்டலில் சாப்பிட வந்த அர்ஜுன்தாஸிடம் சித்தா மருத்துவத்தைப்பற்றி சில விஷயங்களை கேட்டு தெரிந்துக் கொள்கிறார் தான்யா ரவிச்சந்திரன்., ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு பிறகு நட்பாக அது மாறி, அந்த நட்பு காதலாக உருவாகி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு காதலிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு பணி மாற்றம் பெற்ற காவல்துறை அதிகாரி சுதீஷ் சங்கர் அங்கு வருகிறார். அங்கு அர்ஜுன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் இருவரது காதலை கண்டதும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு மிகுந்த கோபம் கொள்கிறார் . காவல் துறை அதிகாரி சுஜித் சங்கருக்கு சிறுவயதில் தனது தாய் தந்தையின் சண்டையை நேரில் பார்த்து வளர்ந்ததால் அவர் ஒரு மன நோயாளி மாதிரி இருக்கிறார். அர்ஜுன் தாஸின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க நினைக்கும் சுஜித் சங்கர், பலவிதத்தில் அவருக்கு தொந்தரவு கொடுக்கிறார். இந்நிலையில் அர்ஜுன்தாஸின் காதலி தான்யா ரவிச்சந்திரனை அழைத்து, அவரது காதலன் அர்ஜுன் தாஸ் குறித்து சில உண்மையான சம்பவங்களை பற்றி கூறுகிறார். இதனால் வேதனை அடைந்த தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன்தாஸிடம் சுஜித் சங்கர் சொன்ன விஷயத்தை கூறி எந்த உண்மையாக இருந்தாலும் என்னிடம் சொல் என்று கேட்கிறார். அர்ஜுன் தாஸ் தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் பற்றி கூறுகிறார். அர்ஜுன் தாஸ் தன் கடந்த கால வாழ்க்கை பற்றி சொன்னதும் தான்யா ரவிச்சந்திரன் அவரை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘ரசவாதி’ படத்தின் மீதி கதை..
சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் வருவதுடன் வர்ம கலையையும் கற்றுத் தேர்ந்தவராக அர்ஜுன் தாஸ் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். பல காட்சிகளில் குறைவான வசனங்கள் பேசினாலும், தனதுபார்வையிலேயே கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மனதில் உள்ல உணர்வுகளை அபாரமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அர்ஜுன் தாஸ், வர்ம கலை மூலம் வேகம் காட்டி இருப்பது அவரது ஆக்ஷன் அவதாரத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவிற்கான நடிப்பை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், தன் நடிப்பு திறனை அழகாகவும் அளவான முறையில் எந்த ஆர்பாட்டம் இல்லாமல் அழகு தேவதையாக படம் முழுக்க மனதில் நிற்கின்ற மாதிரி சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ்., தனது முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்து சிறந்த நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். பரதநாட்டியம் நடனத்தில் அசத்த ஆரம்பித்து, அர்ஜுன் தாஸுடனான காதல், திருமணத்திற்கு பின்னுடனான நடிப்பு என பல கோணங்களில் மிரட்ட வைக்கும் நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை கவர்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கர் தனது கண்களாலேயே வில்லத்தனம் காட்டி மிரட்டியிருக்கிறார். அவரது பார்வையும் உடல் மொழியும் படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவிற்கு கதாபத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் சுஜித்சங்கர்.
ஜி.எம்.சுந்தர், ரம்யா சுப்ரமணியன், ரிஷிகாந்த் என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதையின் தன்மைக்கு ஏற்றவாறு பலம் சேர்க்கும் விதமாக தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
சரவணன் இளவரசு தன் ஒளிப்பதிவு மூலம் கொடைக்கானலின் அழகை மட்டும் இன்றி அங்கிருக்கும் இயற்கை எழில் மிகுந்த சூழலை மிக கச்சிதமாக கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பக்கபலமாக வந்து நிற்கிறது.
‘மௌனகுரு’, ‘மகாமுனி’ என இரண்டு மாறுபட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார், மீண்டும் மற்றொரு மாறுபட்ட கதையை உருவாக்கி ‘ரசவாதி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். தனது முந்தைய இரண்டு படங்களை போலவே இப்படத்திலும் முத்திரை பதித்து அசர வைத்து இருக்கிறார். கதாநாயகன் மட்டும் இன்றி வில்லன் கதாபாத்திரம் மூலம் கூட சில முக்கியமான வாழ்க்கை தத்துவங்களை சொல்லும் வசனங்கள் அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறது. உண்மையில் ஒரு மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ரசவாதி’ படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.