CHENNAI:
பி.சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு – நாசர் – சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, கருணாகரன், சுலில் குமார், சந்துரு, சாம்ஸ், ஸ்ரீமன், மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தமிழகமும், கேரளாவும் இணையும் பகுதியான குமுளியில் சிறிய அளவில் லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் சமுத்திரகனி. தன் மனைவி அனன்யாவடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் சமுத்திரகனிக்கு பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகள் வந்தாலும், அதையெல்லாம் சமாளித்து அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகி வருகிறார். இத் தருணத்தில் அவரது லாட்டரி சீட்டு கடையில் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்க வருகிறார். அப்போது அவருக்கு கொடுத்த லாட்டரி சீட்டுகளை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பையில் பணம் இல்லாமல் நான் மறுபடியும் வந்து பணத்தை கொடுத்து இந்த லாட்டரி சீட்டுகளை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.
அதனால் அந்த லாட்டர்ச் சீட்டுகளை பத்திரமாக பாதுகாத்தபோது, பாரதிராஜா வாங்கி வைத்த ஒரு லாட்டரி சீட்டிற்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. இதனால் ஒன்றும் புரியாமல் தவித்த சமுத்திரகனி எப்படியாவது பாரதிராஜாவை கண்டுபிடித்து இந்த லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது சமுத்திரகனிக்கே தெரியாது. அந்த லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை சமுத்திரகனி எடுத்துக் கொண்டாலும் என்னவென்று கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலையில் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்கிறார்கள். மறுபக்கம் காவல்துறையினர் இந்த பணத்தை எப்படியாவது அபகரிக்க முயல்கிறார்கள். இதனால் சமுத்திரகனிக்கு பல ஆபத்துகள் வருகிறது. அந்த ஆபத்துகளிலிருந்து தப்பித்து லாட்டரி சீட்டில் விழுந்த ஒன்றரை கோடி பணத்தை பாரதிராஜாவை கண்டுபிடித்து கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் “திரு மாணிக்கம்” படத்தின் மீதி கதை.
இப்படத்தில் நேர்மையின் சின்னமாக நடித்து இருக்கும் சமுத்திரக்கனி தன் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.. எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட, தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என மிக அருமையான நடிப்பை கொடுத்து ஒரு உன்னதமான மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.
நாடோடிகள் அனன்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது முகத்தில் இளமை இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பதை பார்க்கும்போது பாராட்டலாம். கணவரின் நேர்மையால் அந்த குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகை என முத்திரை பதித்திருக்கிறார்.
முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் பாரதிராஜா, எப்போதும்போல எதார்த்தமாக நடித்திருக்கும் இளவரசு, சில காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடும் கதாபாத்திரங்களில் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக நடித்து பாதிரியார்களை கலாய்த்த சின்னி ஜெயந்த், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், பேருந்து ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம்ஸ், ஸ்ரீமன் லண்டன் ரிட்டர்னாக வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தாங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அளவான நடிப்பு மூலம் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது.பின்னணி இசையை கதைக்கேற்றவாறு பயணிக்க செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு குளிர்ச்சியாக கேரள பகுதியின் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளை எதார்த்தமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.
ஏற்கனவே லாட்டரி சீட்டு மையமாக வைத்து வெற்றி நடிப்பில் ‘பம்பர்’ என்ற படம் திரைக்கு வந்தது. அதே கதையை இவர் சற்று மாற்றியமைத்து பல துரத்தல் காட்சிகளை புகுத்தி இயக்கி இருப்பதை பாராட்டலாம். பெரிய பணக்காரனாக இருந்தாலும் எளிதில் கிடைத்துவிடாத மனநிம்மதி நேர்மையான வாழ்க்கையில் நிறைவாகக் கிடைக்கும் என்பதை மிக சிறப்பாக அழுத்தந் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
மொத்தத்தில், ‘திரு.மாணிக்கம்’ நேர்மையாக இல்லாதவர்களுக்கு ஒரு பாடம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.