’மெட்ராஸ்காரன்’ திரைப்பட விமர்சனம்!

120

CHENNAI:

ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்புராயன், சரண், கீதா கைலாசம், மற்றும் பலர்நடித்திருக்கும் படம்தான் ‘மெட்ராஸ்காரன்’. இந்தப் படத்தை எழுதி,  இயக்கி இருப்பவர் வாலி மோகன் தாஸ்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

சென்னையில் வசிக்கும்  கதாநாயகன் ஷேன் நிகம், தனது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் விதத்தில் அவரது பெற்றோர் பாண்டியராஜன், கீதா கைலாசம், கருணாஸ் ஆகியோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்து  கொண்டிருக்கும் சூழ்நிலையில்,  கதாநாயகி நிஹாரிகா தன் தந்தையுடன் புதுக்கோட்டைக்கு வருகிறார். அப்போது தான் திருமணம் செய்துக் கொள்ளும் கதாநாயகன் ஷேன் நிகம்மை சந்திக்க வேண்டும் என்று தனது செல்போனில் அழைக்கிறார். நிஹாரிகாவை சந்திக்க காரில் வரும்போது எதிர்பாராமல் நடக்கும் விபத்து மூலம் கதாநாயகன் ஷேன் நிகமின் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாதபடி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த ஊரின் தாதாவான கலையரசன் மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தாவின் மீது காரில் மோதி விடுகிறார். அதனால் அங்கு மிக பெரிய அளவில் உறவினர்கள் கூடி விட,  மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஐஸ்வர்யா தத்தாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விடுகிறது. திருமண மாப்பிள்ளையான ஷேன் நிகம் தன் காதலியை திருமணம் செய்து கொள்ளாமல் செய்த குற்றத்திற்காக இரண்டு வருட தண்டனையாக சிறைக்கு செல்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் நாயகன் ஷேன் நிகம்மிடம்,   தனியார் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் ஒரு நர்ஸ் ஐஸ்வர்யா தத்தாவின் வயிற்றில் இருந்த குழந்தை  உங்களால் இறக்கவில்லை என்ற உண்மையை கூறுகிறார். இதனால் நிலை குலைந்து போகும் ஷேன் நிகம் குழந்தை இறப்பிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் மீதிக் கதை.

தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் ஷேன் நிகம், முதல் படத்திலேயே ஆக்‌ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளில் மிக சிறப்பாக  நடித்திருக்கிறார். அம்மாவிடம் காட்டும் பாசக் காட்சிகள், காதல் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் நிறைவாக செய்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிகாரிகா வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவரது கதாபாத்திரம்தான் திரைக்கதையோட்டத்தின் மையமாக இருக்கிறது. அதை உணர்ந்து நடித்திருந்தாலும் ‘காதல் சடு குடு’ பாடல் காட்சியில் கவர்ச்சி காட்டி அசர வைத்து இருக்கிறார்.

கலையரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் அதை உணர்ந்து தன் நடிப்பின் மூலம் மெருகேற்றி அசத்தியிருக்கிறார்.

கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், சூப்பர் சுப்பராயன் ,அத்தையாக நடித்திருக்கும் தீபா ஷங்கர் , நண்பராக நடித்திருக்கும் லல்லு, ராஜா ராணி பாண்டியன் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ் இசையில் திருமணப் பாடல் கேட்கும்படி இருக்கிறது.எல்லாப் பாடல்களும் ஓகேதான். பின்னணி இசை திரைக்கதைக்கு தகுந்தவாறு அமைத்து இருப்பதை பாராட்டலாம்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஓளிப்பதிவு, படத்தின் காட்சிகளின் வேகத்திற்கு ஏற்ற்வாறு பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை அசத்தலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வாலிமோகன்தாஸ் எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தை இறப்புக்கு கதாநாயகன்தான் காரணம்  என்று நினைத்தபோது, நடந்த தவறுக்கு தான் காரணம் அல்ல என்பதை கதாநாயகன் உணர்ந்து, அதற்கான காரணத்தை அறிய முற்படும்போது, ​​படம் வேகம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து காட்சிகள் என்ன என்பதை த்ரில்லான விதத்தில் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.  ஆனால் தேவையில்லாமல் சில சண்டைக் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

மொத்தத்தில், ‘மெட்ராஸ்காரன்’  படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5,

RADHAPANDIAN.