சென்னை:
ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்டே, எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், KPY. சரத், நவ்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் ‘தினசரி’ என்ற இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர்- சங்கர் ஜி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எம் எஸ் பாஸ்கர் தனது மனைவி மீரா கிருஷ்ணன், மகள் வினோதினி, மகன் ஸ்ரீகாந்த் உடன் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் ஒரு ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார். ஐடி கம்பெனியில் சம்பளம் அதிகம் வாங்கினாலும் அவருக்கு தனது வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கு தன் வருங்கால மனைவி தன்னைவிட அதிகமாக சம்பாதிப்பவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நிலையில் அவரது பெற்றோர் ஸ்ரீகாந்த்திற்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர். ஆனால் ஸ்ரீகாந்த் தனக்கு வரும் மனைவி தன்னைவிட அதிகமாக சம்பளம் வாங்குபவளாக இருக்க வேண்டும் என்று தன் பெற்றோரிடம் கூறுகிறார்.
ஆனால் அதற்கேற்றவாறு எந்த பெண்ணும் அமையாததால், அமெரிக்காவில் பிறந்து பெற்றோரை இழந்து அனாதையாக இருக்கும் கதாநாயகி சிந்தியா லுர்தேவை, சில பொய்களை சொல்லி ஸ்ரீகாந்திற்க்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு தன் மனைவி சிந்தியாலூர்தேவை வேலைக்கு செல்லுமாறு ஸ்ரீகாந்த் சொல்கிறார். ஆனால் சிந்தியா லூர்தே வேலைக்கு செல்ல மறுக்கிறார். இதனால் இருவருக்கும் மன கசப்பு ஏற்படுகிறது. தனது பெற்றோர் பொய் சொல்லி சிந்தியா லூர்தேவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று பெற்றோரிடம் சண்டை இடுகிறார்.
இந்த சூழ்நிலையில் ஸ்ரீகாந்த் பல இடங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி ஒரு சிட்பண்ட் கம்பெனியில் அந்த பணத்தை முதலீடு செய்கிறார். ஒரு சில மாதங்களில் அந்த சிட்பண்ட் கம்பெனி மூடப்பட்டதால் என்ன செய்வது என்று புரியாமல், பலரிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தவிக்கிற ஸ்ரீகாந்த், இறுதியில் அவர் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்த முடிந்ததா? தனது குடும்பத்தில் இணைந்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினாரா? என்பதுதான் ‘தினசரி’ படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் இளம் கணவர் கதாபாத்திரத்திற்குச் சரியான முறையில் மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு எளிமையான குடும்பத்தில் உள்ள ஒருவர் எப்படி எல்லாம் பல இன்னல்களை சந்திப்பார் என்பதை சக்திவேல் என்ற கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிகவும் இயல்பாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். தனக்கு திருமணமானதும் கணவனிடம் காட்டும் பாசம்… அவன் விலகி நிற்க வெளிப்படுத்தும் சோகம் என சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்கிறார்.
ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்க கூடிய அளவிற்கு சிறப்பாக இருக்கிறது, .பின்னணி இசை கதைக்களத்துக்குப் பலமாக பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு மூலம் மிக சிறப்பாக காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
ஒரு மனிதனுக்கு பணம் முக்கியம் என்றாலும், அதற்காக அளவுக்கு மீறி அதிகமாக ஆசைப்படக் கூடாது என்பதையும், பணத்தை விட உறவுகளும் மன நிம்மதியும் அவசியம் என்பதையும் மிகத் தெளிவாக திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஜி.சங்கர்,. .இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் சம்பாதித்தாலும், தற்போது அவர்களது வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்து கொண்டே போவதையும் அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜி.சங்கர்,
மொத்தத்தில், ‘தினசரி’ படம் அனைத்து ரசிகர்களையும் கவரும்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.