‘பேபி & பேபி’- திரைப்பட விமர்சனம்!

106

சென்னை:

ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நகரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம் புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்பாரி கோஷ், ராமர் தங்கதுரை, சேஷு, கல்கி ராஜா, பிரதோஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பேபி & பேபி’. யுவராஜ் பிலிம்ஸ்  தயாரிப்பில் தற்போது வெளி வந்து பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

துபாயில் பணிபுரியும் ஜெய்‌ தன் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்படாமல் பிரக்யா நகராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு துபாயில் வாழ்ந்து வருகிறார். அப்போது அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி அவர் தந்தை சத்யராஜுக்கு தெரிய வருகிறது. இதனால் சந்தோஷம் அடைந்த சத்யராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் தன் பேரனை பார்க்க வேண்டும் என்று சொந்த ஊருக்கு வரும்படி கூறுகிறார்கள். இந்நிலையில் ஜெய் தன் மனைவி பிரக்யா நகராவை அழைத்துக் கொண்டு தன் குடும்பத்தை பார்ப்பதற்காக கோயம்புத்தூருக்கு கிளம்புகின்றனர்.

ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் இளவரசு, ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதால், தன் மகன் யோகி பாபுவை துபாய்க்கு அனுப்பி வைக்கிறார். துபாயில் வேலை பார்க்கும் யோகி பாபு தனது மனைவி சாய் தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு துபாயில் வாழ்ந்து வருகிறார். யோகி பாபுவுக்கும், சாய்தன்யாவுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. தன் பெற்றோரை காண்பதற்காக தன் மனைவி, குழந்தையுடன் யோக பாபு மதுரைக்கு கிளம்புகிறார்கள்.  சென்னை விமான நிலையத்தில் நிலையத்தில் காத்திருக்கும் பொழுது, இருவரது  இரண்டு குழந்தைகளும் இடம் மாறி விடுகிறது. 

யோகி பாபுவின் குழந்தை ஜெய்யிடமும், ஜெய்யின் குழந்தை யோகிபாபுவிடமும் மாறி வந்துவிட  பெரிய அளவில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழந்தைகளை அவரவர் பெற்றோரிடம்  கொடுத்து விடலாம் என்று நினைக்கின்றபொழுது குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்து நிற்க இரண்டு பெற்றோர்களும் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார்கள். கடைசியில் இரு குழந்தைகளும் அவரவர் பெற்றோர்களிடம் போய் சேர்ந்ததா? இல்லையா? என்பதுதான் ‘பேபி & பேபி’ படத்தின் மீதிக் கதை.

ஜெய்க்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. குழந்தைக்காக மல்லுக்கட்டும் கதாபாத்திரம் என்றாலும் பல இடங்களில் அவரது நடிப்பு செயற்கைத்தனமாகவே இருக்கிறது. 

யோகி பாபு பொறுப்பான ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் தனது பங்குக்கு என்னவெல்லாம் காமெடியில் கலக்க முடியுமோ அவ்வளவு கலக்கியிருக்கிறார்.

சத்யராஜ் கண்டிப்பான அப்பாவாக தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். இளவரசு முழுக்க, முழுக்க ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள ஒரு கிராமத்து மனிதராக சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா இருவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஸ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் ஆகியோர் படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.பி சாரதியின் ஒளிப்பதிவு மூலம் படம் முழுவதும் காட்சிகள் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்ட முறையில் மிக அழகாக கொடுத்திருக்கிறார். இது திரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

பேபி &பேபி என்ற தலைப்பிற்கு ஏற்ப குழந்தைகளுடன் சென்று பார்க்கும் படமாக இயக்குனர் பிரதாப். இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.  நகைச்சுவையை மட்டுமே நம்பி இயக்கி இருந்தாலும் பல காட்சிகளில் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர்..

மொத்தத்தில், ‘பேபி & பேபி’ படம் பார்த்து சிரிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.