‘ஃப்ரீடம்’ – திரைப்பட விமர்சனம்!

107

சென்னை:

எம்.சசிக்குமார், லிஜோமோல் ஜோஸ், மு.ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘ஃப்ரீடம்”. இப்படத்தை சத்யசிவா எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

இலங்கையில் உள்ள சிங்கள வெறியர்களால் பல சித்திரவதைகளுக்கு உள்ளான தமிழர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்கு வந்து ராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைகிறார்கள். அந்த ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்ணான லிஜோமோல் ஜோஸ் தன் கணவர் சசிகுமார் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கள்ளத் தோணியில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்கு வருகிறார் சசிகுமார். தன் கணவனுக்காக காத்திருந்த லிஜோ மோல் ஜோஸ் அவரை கண்டு அன்புடன் வரவேற்று இனியாவது தன் கணவனுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தலாம் என்று கனவு காணும்போது சென்னையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குண்டு வெடித்து சாகடித்து விடுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் புதிதாக ஆறு மாதத்திற்குள் வந்த அகதிகளை தனியாக பிரித்து விசாரணை செய்ய காவல்துறையினர் ஈடுபடுகிறார்கள்.  இந்தியா வந்து, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும், இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் குழுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வுக் குழு சந்தேகிக்கிறது. இந்த சூழலில் சசிகுமார் வீட்டிலும் காவல்துறை சோதனை செய்யும் போது அங்கு அவரது பையில் துப்பாக்கி இருக்கிறது.  இதனைக் கண்டு கொதிப்படைந்த காவல்துறை சசிகுமாரையும் அவருடன் ஆண்கள் பெண்கள் என 43 பேரை கைது செய்கின்றனர். இவர்கள் அனைவரைம் வேலூரில் உள்ள கோட்டையில் உள்ள  சிறப்பு சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு அனைத்து இலங்கை அகதிகளையும்  காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி பல கொடுமைகளையும், கொடூரமாக சித்ரவதையும்  செய்கின்றனர். விசாரணை என்ற பெயரில் பல வருடங்களாக சசிக்குமாரையும், இலங்கைத் தமிழர்களையும் அடித்து துன்புறுத்தி பல கொடுமைகளை காவல்துறையினர் செய்ததால், அவர்களிடமிருந்து தப்பிக்க அகதிகள் அனைவரும் கோட்டையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிக்க முயல்கின்றனர். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் வேலூர் கோட்டை சிறப்பு சிறையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘ஃப்ரீடம்’  படத்தின் மீதி கதை.

மாறன் என்ற  இலங்கை தமிழராக சசிகுமார் நடித்திருக்கிறார்.  இலங்கை தமிழ் வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி என மிக சிறப்பாக நடித்திருக்கிறார். காவல்துறையின் கொடூர செயல்களினால் துடிக்கும் ஈழத்தமிழர்களின் வலியை தனது சிறந்த நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களை கலங்க வைத்துவிடுகிறார். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பு என்று சொல்லிவிட முடியாதபடி மிகவும்  எதார்த்தமாக இயல்பாக நடித்திருக்கிறார் சசிகுமார்.

சசிகுமாரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி செல்வியாக நடித்திருக்கும் லிஜிமோல் ஜோஸை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சசிகுமாருடன் சிறையில் இருப்பவர்களில் முக்கியமானவர் மு.இராமசாமி, இன்னொரு சிறைவாசி மணிகண்டன் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்து நம்மை பிரமிக்க வைத்து இருக்கிறார்கள்.

புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் சுதேவ் நாயர், வழக்கறிஞராக நடித்திருக்கும் மாளவிகா என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசை  படத்தின் கதைக்கு ஏற்றவாறு, காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

உதயகுமார் ஒளிப்பதிவில் வேலூர் சிறைக்காட்சிகளும், அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகளும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படமாக்கப்பட்டு இருப்பதை பாராட்டலாம்.

ராஜீவ் காந்தி கொலையின் போது, தமிழகத்தில் இருந்த இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் சத்யசிவா, இங்கு நடந்த கொடுமைகளை மிக தத்ரூபமாக கதை எழுதி இயக்கி இருக்கிறார். தமிழ் உணர்வைத் தட்டியெழுப்பும் வகையில் விறுவிறுப்பாக, அதே நேரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதல்களை அற்புதமாக காட்சிப்படுத்தி,  இப்படத்தைத் திறம்பட நகர்த்திச் சென்றிருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.

மொத்தத்தில், ‘ப்ரீடம்’ படம் வலி மிகுந்த போராட்டம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.