சென்னை:
டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சேலம் மாவட்டத்தில் பொன்வயல் என்கிற கிராமம் மலைப்பகுதியில் வசித்து வருகிறார் செல்வராகவன். அங்கே சாலை போக்குவரத்து அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த ஊரிலுள்ள வயதான ஒரு பெரியவர் அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்துக்கொண்டே போராடிக் கொண்டிருக்கிறார். பனை நுங்கு, பதனீர் வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார் செல்வராகவன். இந்த சூழலில், பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டு, குஷி ரவியை திருமணம் செய்து கொள்கிறார் செல்வராகவன். தன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். தன் மனைவி செல்வி பெயரில் தொடங்கும் அந்த உணவகத்தில் நல்ல விற்பனை நடக்கிறது. இந்த சூழலில் அந்த ஊரிலுள்ள வயதான ஒரு பெரியவருடன் இணைந்து அங்குள்ள தொகுதி எம்.எல்.ஏ. விடம் அடிப்படை வசதிகள் கோரி இருவரும் மனு கொடுக்கிறார்கள்.
அப்பொது அந்த எம்.எல்.ஏ.தன்னுடன் கூடவே இருக்கும் மைம் கோபியிடம் அந்த ஊருக்கு அடிப்படை வசதிகள் ஏன் செய்யவில்லை என்று அவரது கன்னத்தில் அறைந்து விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்த கோபம் மைம் கோபிக்கு இருந்ததால் செல்வராகவன் நடத்தும் உணவகத்திற்கு தனது அடியாட்களுடன் சென்று அங்குள்ள எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்குகிறார்கள். எம்.எல்.ஏ. வின் உறவினரான மைம் கோபி, தனியாக கம்பெனி ஒன்றை நடத்திக் கொண்டு அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து அவர்கள் அதனை கொடுக்கமுடியாத பட்சத்தில் அவர்களை தனது காம இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறார். அதனால் மைம் கோபி மீது அங்குள்ள மக்கள் மிகுந்த பயத்துடன் வாழ்கிறார்கள். அதன்பிறகு செல்வராகவனின் வாழ்க்கையில் மிகப்பெரும் சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. செல்வராகவனுடன் குஷி ரவி மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துக் கொள்கிறார். அவர் ஏன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை அறிந்துக் கொண்ட செல்வராகவன் ஒரு மிருகத்தனமான மனிதனாக மாறுகிறார். அவர் வெகுண்டெழுந்து செய்யும் காரியங்களால் அந்த ஊர் மக்களுக்கு அவர் தெய்வமான இடத்தை அடைகிறார். செல்வராகவன் ஏன் மிருகத்தனமான மனிதனாக மாறினார்…என்பதுதான் “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் மீதிக் கதை.
செல்வராகவன் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து ஒரு அமைதியான மனிதராக முழுமையாக வாழ்ந்து இருக்கிறார். முழு படத்தையும் அவரால் தாங்கி நிற்க முடியுமா என்ற கேள்வி தொடக்கத்தில் இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கும்விதம் அவரை கதையின் நாயகனாக நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. தன் மனைவியிடம் பாசம் காட்டும் போதும் கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் போதும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
இப்படத்தில் செல்வியாக அறிமுகமாகும் குஷி ரவி, ஒரு கிராமத்துப் பெண்ணின் வலியைத் தனது கண்களாலேயே வெளிப்படுத்தும்போது தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
செல்வராகவனின் சகோதரியாக நடித்திருக்கும் கெளசல்யாவுக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
கந்துவட்டி கொடுப்பவராக இன்பராஜ் பாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி,தனது கொடூரமான நடிப்பின் மூலம் அனைவரையும் வெறுக்க வைக்கிறார்.
அரசியல்வாதியாக வருகிற ஒய்.ஜி.மகேந்திரன் வழக்கம் போல்தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுமி லிர்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் அந்த ஊர் மனிதர்களாகவே நடித்திருக்கிறார்கள்.
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத மலை கிராமங்களை, அங்கு வசிக்கும் மக்களை, அவர்கள் மனநிலைகளை, தன்னுடைய ஒளிப்பதிவில் அப்படியே காட்டி அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நமக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தாலும் பாடல்கள் உருக வைத்துவிட்டன.
எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத். ஒரு வலிமையான சமூகக் கருத்தை சொல்ல முயற்சித்தாலும், எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு, அதை அடைவதற்கான அவர்களின் கடின உழைப்பு ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை பிரச்சனை அதன் மூலம் அவர்களுக்கு நிகழும் கொடுமையை உணர்த்தி இருக்கிறார்.
மொத்தத்டில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் மனதை நெகிழ செய்யும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN..