‘கட்டா குஸ்தி 2’ திரைப்பட விமர்சனம்!

103

சென்னை:

2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ,ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா, யோகி பாபு, தீப்தி, கருணாஸ், முனீஷ் காந்த், காளிவெங்கட், கருணாகரன்,லிசி ஆண்டனி,கஜராஜ்,ஸ்ரீஜா ரவி, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

முதல் பாகத்தின் கலகலப்பையும், கணவன்-மனைவி உறவின் மோதல்களையும் ரசித்த ரசிகர்களுக்கு, ‘கட்டா குஸ்தி 2’ இன்னும் அதிகமான குடும்ப உணர்வுகள், காமெடி, சென்டிமென்ட் என அனைவரையும் ரசிக்க வைக்கிறது. முதல் படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை பயணிக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார் ரயில்வே துறையில் பணி புரிந்தாலும் மல்யுத்த வீராங்கனையாக எல்லா போட்டியிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று சாதித்து வருகிறார். கணவன் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதிகளுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.  அந்த குழந்தையை விஷ்ணு விஷால் பார்த்துக் கொண்டு அதே சமயத்தில் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக மனைவிக்கு உதவி செய்து வருகிறார். ஆனால் தனது ஐந்து வயது மகளைக் கவனிக்க முடியவில்லை என்ற கவலையால், அப்பாவின் செல்லத்தில் மகள் கெட்டுவிடுவாளோ என்று பயந்து தான் பொறுப்பு எடுத்துக் கொண்டு தினமும் மகளை பள்ளிக்கு அழைத்து செல்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே  சில தவறான புரிதல்கள் ஏற்படுகிறது. இந்த சூழலில் ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்த போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதைக் கண்டு  ஒன்றும் செய்ய முடியாமல் தவித்த, பயிற்சியாளர் எப்படியாவது ஐஸ்வர்யா லட்சுமியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில சதி வேலைகளில் ஈடுபடுகிறார்.  கணவன் விஷ்ணு விஷாலை அறியாமலேயே தனது பழிவாங்கும் திட்டத்தை பயன்படுத்துகிறார் பயிற்சியாளர் .அப்போது  கணவன் விஷ்ணு விஷால் மூலம் சாப்பாட்டில் போதை மருந்து கலக்க வைத்து மல்யுத்த போட்டியில் ஐஸ்வர்யா லட்சுமியை தோற்கடிக்க பயிற்சியாளர் நினைக்கிறார். இந்த சமயத்தில் எப்போது பார்த்தாலும் மல்யுத்த போட்டியை நினைத்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமியின் கோபத்தை குறைக்க அவருக்கே தெரியாமல்  சாப்பாட்டில் போதை மருந்து கலந்து கொடுத்து விடுகிறார் விஷ்ணு விஷால்.  இதனால் மல்யுத்த போட்டியில் கலந்துக் கொண்ட எதிரியிடம் ஐஸ்வர்யா லட்சுமி தோற்று விடுகிறார்.

தனக்கு போதை மருந்து கொடுத்த விஷயத்தை அறிந்து கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி தன் கணவன் விஷ்ணு விஷால் செய்த துரோகத்தை எண்ணி, அதற்கான காரணம் கணவன்தான் என்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா லட்சுமி தன் கணவன் விஷ்ணு விஷாலிடம் கோபம் கொண்டு தன் மகளையும் தன் தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.  ஆனால் ஒரு பாவமும் செய்யாத விஷ்ணு விஷால் அந்த பயிற்சியாளர் செய்த சதியை தெரிந்து அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் மனைவி ஐஸ்வர்யா லட்சுமியிடம் சென்று பயிற்சியாளர் செய்த சதி திட்டத்தைப்பற்றி சொல்கிறார். ஆனால்  ஐஸ்வர்யா லட்சுமி அதை நம்ப மறுக்கிறார்.இறுதியில் உண்மை தெரிந்து விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும்  ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக வீரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால், தண்ணீர் பிடிக்கும் பெண்கள் கூட்டத்தில் முண்டி அடித்துக்கொண்டு இரண்டு கைகளிலும் ஏராளமான குடங்களுடன் உள்ளே நுழைந்து வெளிவரும் காட்சியில் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஹவுஸ் ஹஸ்பண்ட்டாக மனைவிக்கு ஏற்ற சிறந்த கணவராக தோன்றி காமெடி கலந்த நடிப்பில் அசத்தி இருக்கிறார். தன் மனைவி மலயுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தன் மனைவிக்கு துணையாக  நிற்கும் காட்சிகளில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்த வீராங்கனையாக மீண்டும் தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறார். உடல் ரீதியாக முரட்டுத்தனத்தையும் மனரீதியாக விஷ்ணு விஷாலிடம் காதலையும் சிறந்த முறையில் யதார்த்தமாக நடித்து மகள் மீது பாசம் வேகம் கோபம் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி பெரும் வரவேற்புப் பெறுகிறார்.

மற்றொரு கதாநாயகியாக, மீனு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோக்‌ஷா, விஜய்யின் ‘அப்படி போடு போடு’ பாடலின் அவர் ஆடும் ஆட்டம் தியேட்டரையே அதிர வைக்கிறது.

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா,வயதுக்கு மீறி பேசி அனைவரையும் ரசிக்க வைக்கிறார்.

விஷ்ணு விஷாலின் மாமா ரத்தினம் கதாபாத்திரத்தில் வரும் கருணாஸ் ,தன் குலப்பெருமையை பேசிக்கொண்டு சிரிக்க வைக்கிறார்.அவரது மனைவியாக வரும் லிசி ஆண்டனி பஞ்சாயத்து தலைவராக மாறி, அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பேசுவதைக் கண்டு ரசிகர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கீர்த்தியின் சித்தப்பா கணேசனாக வரும் முனிஷ்காந்த், வழக்கறிஞர் சட்டநாதன் பாத்திரத்தில் வரும் காளி வெங்கட் , கீர்த்தியின் தந்தையாக வரும் கஜராஜ், தாயாராக வரும் ஸ்ரீஜா ரவி, டிடிஆர் பார்த்தா பாத்திரத்தில் வரும் கருணாகரன்,கீர்த்தியுடன் போட்டியாளராக மோதும் தீப்தி  ஆகியோரது  கதாபாத்திரங்கள் கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சிறந்த முறையில் அமைந்துள்ளன.

நீதிபதி ராஜ ராஜேஸ்வரியாகச்  சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல்பீர் சிங்காக வரும் யோகி பாபு இருவரும் படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார்கள்.

கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில்  கிராமப்புறங்களின் இயற்கை அழகையும், மல்யுத்த அரங்குகளின் வீர உணர்வுகளையும் கலர்ஃபுல்லான வகையில் பதிவு செய்துள்ளதை பாராட்டலாம்.

ஷான் ரோல்டன் இசையில்  பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் முக்கியமான காட்சிகளின் தாக்கத்தை உயர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது.

கதை எழுதி இயக்கியிருக்கும் செல்லா அய்யாவு, ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்து சிரித்து மகிழக் கூடிய வகையில் படத்தை இயக்கி இருக்கிறார். தன் படைப்பால் ரசிகர்களை ஏமாற்றம் இல்லாமல் ஒரு பொழுது போக்கு படமாக கொடுத்து  நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ குடும்பத்துடன் சென்று கண்டுகளிக்க வேண்டிய காமெடி படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.