சென்னை:
அஜய் கார்த்தி ,அஞ்சனா நேத்ரன், நட்டி நடராஜ், கே பாக்யராஜ் , விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “டார்க்” இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கல்யாண் கே ஜெகன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கருணாகரன் என்கிற கே.பாக்யராஜ் தனது சொந்த வீட்டில் அவரும், அவருடைய மகளான பிரியதர்ஷினி என்கிற அஞ்சனா நேத்ரனும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வீட்டின் மேல் மாடியில் மூன்று இளைஞர்கள் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள். ஒரு நாள் பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதன் பிறகு அங்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால், அதற்கு ‘பேய் வீடு’ என்ற பெயர் ஏற்பட்டதால், அந்த பயத்தில் அங்கு யாரும் குடியிருக்க வரவில்லை. அந்த மாடி வீட்டிற்குள் யாரும் செல்ல தயங்கும் சூழலில், குறைந்த வாடகை என்ற ஒரே காரணத்திற்காக எந்த பயமும் இல்லாமல் அங்கு குடியேறுகிறார் விக்னேஷ் என்கிற அஜய் கார்த்தி. அந்த வீட்டில் பேய் – பிசாசு பற்றிய நம்பிக்கை இல்லாத அஜய் கார்த்தியை இரவில் அச்சமூட்டும் அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்ந்து அவரை மிரட்டுகின்றன. இதனால் மிகுந்த அச்சத்திலும், அதிர்ச்சியிலும் குழம்பிப் போகிறார். அஜய்.
ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளரான கருணாகரன் என்கிற கே.பாக்கியராஜ் மேல் மாடியில் குடியிருக்கும் விக்னேஷ் என்கிற அஜய் கார்த்தியுடன் இணைந்து மது அருந்துவதற்காக செல்கிறார். இருவரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். பின்னர் மர்மமான முறையில் விக்னேஷ் என்கிற அஜய் கார்த்தி உடம்பெங்கும் பயங்கரமான காயங்களுடன் இறந்து கிடக்கிறார். அவருக்கு அருகில் கருணாகரன் என்கிற கே.பாக்கியராஜும் இறந்து போகிறார்.
இந்த இரண்டு மரணங்கள் குறித்து விசாரித்து புலனாய்வு செய்ய போலீஸ் அதிகாரி பாலச்சந்தர் (நட்ராஜ் சுப்பிரமணி என்கிற நட்டி) வருகிறார். சம்பவ இடத்தை அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, சடலமாய் கிடந்த விக்னேஷ் என்கிற அஜய் கார்த்தி திடீரென்று எழுந்து பேசிவிட்டு மீண்டும் சரிந்து விழுகிறார். பிணம் பேசியதைக் கண்ட போலீஸ் அதிகாரி நட்டி அதிர்ச்சி அடைகிறார். உயிர் உள்ளதோ என்று நினைத்து மயங்கிக் கிடக்கும் விக்னேஷ் என்கிற அஜய் கார்த்தியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி நட்டி. இறுதியில் அந்த வீட்டில் நடந்த கொடூர மரணங்களின் பின்னணி என்ன? என்பதை போலீஸ் அதிகாரி நட்டி விசாரிக்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அவை என்ன என்பதுதான் “டார்க்’ படத்தின் கிளைமாக்ஸ்.
இப்படத்தில் கதையின் நாயகன் விக்னேஷாக அறிமுகமாகி இருக்கும் அஜய் கார்த்தி ஆரம்பத்தில் தைரியமாக நடக்கும் இளைஞனாகவும், பின்னர் அமானுஷ்ய அனுபவங்களால் மனதளவில் உடைந்து போகும் மனிதராகவும் இயல்பான மாற்றத்தை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
வீட்டின் உரிமையாளர் கருணாகரனாக கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார். தனது முதிர்ந்த நடிப்பின் மூலம் தனது திரை இருப்பை நிறைவு செய்துள்ளார். இப்படத்தில் பாக்யராஜ் இறப்பது போல் நடித்திருப்பதும் அண்மையில் அவர் மரணம் அடைந்ததையும் அறியும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.
அவரது மகள் பிரியதர்ஷினியாக அஞ்சனா நேத்ரன் நடித்திருக்கிறார். இப்படத்தில் சற்று வேறு முகம் காட்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத உணர்வையும் கொடுத்து அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
போலீஸ் அதிகாரி பாலச்சந்தராக நட்ராஜ் சுப்பிரமணியன் (எ) நட்டி நடித்திருக்கிறார். வழக்கம் போல் இயல்பான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, சாகுல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்கள் என்பதால் ஒளியை மிக நுணுக்கமாக பயன்படுத்தி இருளில் இத்தனை நிறங்களா என்று வியக்கும் விதத்தில் அனைவரும் ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
மனோ ரமேஷனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும், பின்னணி இசை, படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. அமைதியான காட்சிகளுக்குக் கூட பதற்றத்தை உருவாக்கும் வகையில் இசை அமைந்துள்ளதை பாராட்டலாம்.
கணேஷ் கே பாபு எழுதிய இப்படக்கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கே ஜெகன். ஒரு விறுவிறுப்பான திகில் கதையை மனித உளவியல் பார்வையில் உருவாக்கி பேய் பிசாசு என்ற உருவத்தைக் காட்டாமல் மனித மனதில் உள்ள உணர்வுகளைக் காட்டியே எடுத்துக்கொண்ட கதையை தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் திகில் படமாக யூகிக்க முடியாத புதுமையான கிளைமாக்ஸுடன் முடித்திருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் ‘டார்க்’ – திகில், அமானுஷ்ய படங்களை விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.