சென்னை:
அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன் எஸ் ,நிகாரிக்கா, சின்னி ஜெயந்த்,ரக்சன், டிராவிட் ,ஏஞ்சலின் அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜோனிதா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “இதயம் முரளி”. இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
பெற்றோரை இழந்த அதர்வாவை அவரது தாய் மாமன் நட்டி தன் பிள்ளை போல் வளர்க்கிறார். அதர்வா வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் நட்டி. இந்த சூழலில் திருமணம் நடக்கின்ற முதல் நாளில் அமெரிக்காவில் தனது நண்பர்களுடன் இருக்கும் அதர்வா சென்னைக்கு வருவதற்கு தாமதமானதால் தாய்மாமன் நட்டி பரபரப்பான சூழ்நிலையில் என்ன செய்வது என்றும் தெரியாமல் முழிக்கிறார். ஆனால் அதர்வா தன் மாமன் நட்டியிடம் அமெரிக்காவிலிருந்து கிளம்பி விட்டேன் என்று கூறி, விமானத்தில் வரும்போது தன் அருகில் இருக்கும் பகத் பாசிலிடம் தனது காதல் கதையை சொல்ல முற்படுகிறார். முதலில் அதர்வாவின் காதல் கதையை கேட்க தயங்கிய பகத் பாசில், அதன் பிறகு அவரிடம் காதல் கதையை கேட்கிறார்.
தனது பள்ளி பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை டியூஷன் சென்டரில் பார்த்து அதர்வா அவரை காதலிக்கிறார். பிரீத்தி செல்லும் இடமெல்லாம் அவரையே சுற்றி வரும் அதர்வா ரகசியமாக தன் மனதில் காதலை வளர்த்துக் கொண்டு சொல்ல முடியாமல் அமைதி காக்கிறார். ஆனால் ப்ரீத்தியிடம் எப்படியாவது காதலிக்கின்ற விஷயத்தை சொல்ல முற்படும் போது பல சந்தர்ப்பங்களில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த சூழலில் அவர் சென்னைக்கு வரும் சூழல் ஏற்படுகிறது. சென்னையில் மருத்துவராக செயல்படும் தனது நண்பனை சந்திக்கிறார். மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரைக் கண்டதும் மனதை பறிகொடுத்து காதலில் விழுகிறார். தனது மருத்துவ நண்பன் மூலமாக் கயாடு லோஹருடன் பேசி பழகுகிறார்.
அவரிடம் சொல்ல வேண்டிய தன் காதலைப்பற்றி சொல்ல முடியாமல் தயங்கித் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் கல்லூரிக் காலம் முடிந்து கயாடு லோஹர் தனது சொந்த ஊருக்குப் புறப்படுகிறார் அவரை வழி அனுப்பி வைக்கச் செல்லும்போது ரயில் நிலையத்தில் தனது காதலைச் சொல்லலாம் என்று எண்ணிக்கொண்டே செல்கிறார். ஆனால் அதர்வாவால் அவரிடம் தன் காதலை சொல்ல முடியவில்லை. தான் காதலித்த பெண்களை இழந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வரும் அதர்வா, தாய் மாமன் ஏற்பாடு செய்த பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதுதான் “இதயம் முரளி’ படத்தின் மீதிக் கதை.
1991 காலகட்டத்தில் ‘இதயம்’ படத்தில் முரளி நடித்த அதே போன்ற கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் அதர்வா ஏற்றிருக்கிறார். தன் தந்தைக்கு ஏற்றவாறு நடித்த அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதர்வா. ஸ்டைலான தோற்றத்தில் கவனம் ஈர்த்தாலும், நடிப்பில் பெரிய புதுமை இல்லாமல் ஒரே மாதிரியான பாணியில் காதல், ஏக்கம், உணர்வுகள் எதுவும் இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவரும் அதர்வாவின் காதலிகளாக நடித்திருக்கிறார்கள். இருவரும் தங்களது அழகான திரை இருப்பால் காதல் காட்சிகளுக்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
முக்கியவேடத்தில் நடித்திருக்கும் நட்டி,முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். அதர்வா சொல்லும் கதையை அலட்சியமான விதத்தில் பகத் பாசில் கேட்கும் காட்சிகள் எதார்த்தமாக உள்ளது.
இப்படத்தில் பரிதாபங்கள் சுதாகர்,ட்ராவிட் செல்வம்,தமன்,நிஹாரிகா,ரக்ஷன் ஆகிய அனைவரும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளனர்.ரைசா வில்சன், சின்னி ஜெயந்த், பப்லு பிரித்விராஜ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இளமைக் கொண்டாட்டமாக அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது ஒளிப்பதிவு மூலம் கதையின் காட்சிகளை மிகப் சிறப்பாகவும் ஒவ்வொரு கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாகவும் கொண்டு சென்று படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இன்றைய இளம் வயதுள்ள ரசிகர்களுக்கு ஏற்ப கதை எழுதி அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து அதற்குரிய காட்சிகளை வண்ணமயமாகவும் இளமைத் துள்ளலாகவும் உருவாக்கி இருக்கிறார். பழைய நினைவுகளையும், இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் இணைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் இந்த படத்தை இயக்கி இருப்பதை பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் “இதயம் முரளி” காதலர்கள் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.