’தேசிங்குராஜா 2’ திரைப்பட விமர்சனம்!

133

சென்னை:

விமல், ஜனா, பூஜிதா பொன்னாடா , சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, புகழ், சாம்ஸ், ஆர்வி உதயகுமார், ஹர்ஷிதா, ஜூஹி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, மதுரை முத்து, கே பி ஒய் வினோத், முபாரக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘தேசிங்கு ராஜா 2’. இப்படத்தை கதை எழுதி இயக்கி இருக்கிறார் எழில்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் கதா நாயகன் விமல் நேர்மையாக இல்லாமல் லஞ்சம் வாங்குவது, குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுப்பது, காவல் நிலையத்திற்கு வரும் நபர்களிடம் மிரட்டி பணம் புடுங்குவது என்று காவல்துறைக்கு கலங்கம் விளைவிக்கும் அளவில் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் புகழ் பெண் காவல்துறை அதிகாரியாக விமலுக்கு போட்டியாக விளங்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் பிரபல ரவுடியாக விளங்கி வரும் மார்க்கெட் பாண்டி என்பவனை கொலை செய்து, அவன் தலையை வெட்டி இன்னொரு ரவுடி எடுத்து செல்கிறான். அந்த தலையை கொலை செய்த ரவுடி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நேரே விமல் பணி புரியும் காவல் நிலையத்திற்கு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் தலை காவல் நிலையத்திலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுகிறது. கொலை செய்யப்பட்ட மார்க்கெட் பாண்டியின் தலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் விமலின் நண்பரான ரவுடி ஜனா அமைச்சர் ரவி மரியாவின் மகனை கொலை செய்வதாக சவால் விடுகிறார். இதனால் காவல்துறை உயர் அதிகாரி அமைச்சர் மகனை காப்பாற்றவும், அவரைபாதுகாக்கவும்  சிறப்பு காவல் துறை அதிகாரி பூஜிதாவிடம் ஒப்படைக்கிறார்.  பூஜிதாவும் விமல் தலைமையில் அமைச்சர் மகனை காப்பாற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி அமைச்சர் ரவி மரியாவின் மகன் கொலை செய்யப்படுகிறார். அமைச்சர் மகனை கொலை செய்த ஜனாவை கைது செய்தார்களா? இறந்து போன மார்க்கெட் பாண்டியின் தலையை கண்டுபிடித்தார்களா? என்பதை மிகவும் சுவாரசியமான முறையில் கலக்கல் காமெடியில் உருவாகி இருக்கும் படம் தான் ‘தேசிங்கு ராஜா 2’.‌

காவல்துறை அதிகாரிக்குரிய எந்த இலக்கணமும், மிடுக்கான தோற்றம் எதுவும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விமல், ரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதில் அக்கறையே இல்லாமல் ஏமாளித்தனமான சேட்டைகள் செய்து வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தன்னுடைய கடனை அடைப்பதற்காக கதையை சரியான முறையில்  கேட்காமல் வாய்ப்பு வந்தால் போதும் என்று நடித்து இருப்பது அனைவரின் மனதை நோக வைத்து இருக்கிறது.

இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனாவுக்கு ஆடல்,பாடல்,சண்டை என எல்லா விசயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வில்லனாக மிரட்டலாக நடிப்பில் எந்தவித குறை வைக்காமல் நிறைவாக  அசத்தி இருக்கிறார்.

பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லமூரி, ஜூகி என மூன்று பேர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.  மூவருக்கும் தலா ஒரு பாடல், சில காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூவரும் தங்களுக்கு கொடுத்த பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து,  விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது.ஆனால் நகைச்சுவையைத் தேடி எடுக்க வேண்டியிருப்பது சோகம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் செய்யும் காமெடி  ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

பெண் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் புகழின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு சிரிப்பதற்க்கு பதிலாக கோபத்தை வர வைக்கிறது.

இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் பாடல்கள் பெரிதாக கேட்கும் ரகம் இல்லை.பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.

செல்வா ஆர் ஒளிப்பதிவு  கதைக்கு தகுந்தவாறு படமாக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் எழில், தனக்கென ஒரு தனி பாணியில் காமெடி கலந்த கதையை எழுதி, ரசிகர்களிடம் ஒரு பெரிய மரியாதையைப் பெற்றிருப்பவர். ஆனால் அவருடைய பாணியிலிருந்து மாறுபட்டு இப்படத்தில் காமெடி காட்சிகளை அனைவரும் வெறுக்கும் அளவுக்கு படமாக்கி இருப்பது வேதனையாக இருக்கிறது.  அவரது படங்களில் பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும். அதிலும் அவர் தோல்வியை தழுவி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘தேசிங்குராஜா 2’  படம் ரசிக்க முடியவில்லை.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.